தூத்துக்குடி மாவட்டத்தில் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாணவ-மாணவிகள் மிகுந்த உற்சாகத்துடன் இன்று காலை தங்களது பள்ளிகளுக்குச் சென்றனர்.
தூத்துக்குடி ஜின் பாக்டரி ரோட்டில் அமைந்துள்ள மாநகராட்சி பள்ளியில் இன்று மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு முற்றிலும் வித்தியாசமான முறையில் நடைபெற்றது. அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பிரகாஷ் தலைமையில் ஆசிரியர்கள் பள்ளி வளாகத்தின் நுழைவாயிலில் மங்களகரமான மேளதாளங்கள் முழங்க மாணவ-மாணவிகளின் மீதும் மலர்கள் தூவி வரவேற்றனர்.
மேலும், மாணவர்களின் கல்விப் பயணத்தை உற்சாகப்படுத்தும் விதமாக அவர்களுக்குத் தேவையான ஸ்கேல், பென்சில், பேனா உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்த வித்தியாசமான வரவேற்பு முறை மாணவர்களிடையேயும் பெற்றோர்களிடையேயும் பெரும் நெகிழ்ச்சியையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.

இதற்கிடையில், இன்று பள்ளி திறக்கப்பட்ட முதல் நாளானதால், தங்களது பிள்ளைகளை இப்பள்ளியில் புதிதாகச் சேர்ப்பதற்காகப் பெற்றோர்கள் திரண்டனர். பெற்றோர்கள் மற்றும் வாகனங்களின் அதீத கூட்டத்தினால், தூத்துக்குடி ஜின் பாக்டரி ரோடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


