நெல்லை ஆ. கணபதி (பிறப்பு: 3 டிசம்பர் 1935 – இறப்பு: 27 மே 2019) சிறுவர்க்கான கதைகள், நாடக நூல்கள் பல எழுதியவர். இவர் ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கரந்தானேரி எனும் சிற்றூரில் 03-12-1935 இல் பிறந்தார். பெற்றோர் ஆண்டபெருமாள்- கோமதி அம்மாள்.தமிழில் முதுகலைத் தமிழ் பயின்ற இவர்,’வித்துவான்’ பட்டம் பெற்றுள்ளார். இவர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றி உள்ளார்; அதற்காக நல்லாசிரியர் விருது பெற்றுள்ளார். தனது இலக்கியப்பணிக்காக ஏவிஎம் அறக்கட்டளையின் சிறந்த எழுத்தாளருக்கான விருதுபெற்றுள்ளார். இவர் மனைவி சுப்புலெட்சுமி; இவருக்குப் பெண்மக்கள் இருவரும் மகன் ஒருவரும் உள்ளனர். அப்பெண்மக்களுள் ஒருவர் நெடுங்கதை எழுத்தாளரும் தொலைக்காட்சி நிலைய இயக்குநருமான ஆண்டாள் பிரியதர்ஷினி ஆவார்.[1]இவரது குடும்பமே தமிழ் இலக்கியத்தில் ஈடுபாடுகொண்ட குடும்பமாகும்.]
கவிதை, கட்டுரை, கதை, திரைப்பட இசைப்பாடல்கள் எனப் பன்முக படைப்பாற்றல் மிக்கவர். 20க்கு மேற்பட்ட இலக்கிய நூல்களையும் 30க்கும் மேற்பட்ட குழந்தையிலக்கிய நூல்களையும் எழுதியுள்ளார்.
இவர் 1963 இல்,’ தமிழகம்’ எனும் திங்களிதழ் நடத்திய கவிதைப் போட்டியில் பங்கு பெற்று முதல் பரிசுப் பெற்றுள்ளார். 1990 இல் அண்ணாநகர் தமிழ்சங்கம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, மரபு கவிதை எனும் தலைப்பில் உரையாற்றினார்.
நெல்லை ஆ கணபதி 2019 மே 27ஆம் நாள் திங்கட்கிழமை சென்னை அண்ணாநகர் திருமங்கலம் பகுதியிலுள்ள தனது வீட்டில் காலமானார். [1]


