தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் நேற்று இரவு முதல் ‘கிரீன் கேட்’ நுழைவு வாயிலில் உள்ள சரக்கு பெட்டக ஸ்கேனிங் இயந்திரத்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சரக்கு லாரிகளுக்கான சோதனைப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, துறைமுக வளாகமே ஸ்தம்பித்துள்ளது.
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின் முக்கியப் பாதுகாப்புச் சோதனையான ஸ்கேனிங் பணியை மேற்கொள்ள முடியாததால், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்வதற்காகப் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களிலிருந்து சரக்குகளை ஏற்றி வந்த நூற்றுக்கணக்கான கன்டெய்னர் லாரிகள் துறைமுக வளாகத்திற்குள்ளும், அதனைச் சுற்றியுள்ள மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட இணைப்புச் சாலைகளிலும் பல மணி நேரமாக நீண்ட வரிசையில் தேங்கி நிற்கின்றன.
இதனால் லாரி ஓட்டுநர்கள் உணவின்றியும், வர்த்தகர்கள் தங்களது சரக்குகளை உரிய நேரத்திற்குள் கொண்டு சேர்க்க முடியாமலும் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்தத் தாமதம் காரணமாக, துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சர்வதேசக் கப்பல்களுக்குச் சரக்குகளைக் கொண்டு சேர்ப்பதில் பெரும் காலதாமதம் ஏற்பட்டு, வர்த்தகப் பாதிப்பு உண்டாகும் என ஏற்றுமதியாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாகவும் இந்த பிரச்சனை எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக துறைமுக நிர்வாகம் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


