தூத்துக்குடியில் அண்ணன்- தம்பி கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 3பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி தெர்மல் நகர் அருகே உள்ள கோவில் பிள்ளை நகரை சேர்ந்தவர் சின்னத்துரை. இவருக்கு பாண்டியன் (36), அருள் ராஜ் (30), வேல்முருகன் என்ற 3 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். இதில் மகள்களுக்கு திருமணமாகி விட்டது. மகன்களில் வேல்முருகனுக்கு மட்டும் திருமணம் முடிந்துள்ளது. பாண்டியன் மற்றும் அருள் ராஜ் ஆகியோர் கூலி வேலைக்கு சென்று வந்துள்ளனர்.
இதில் பாண்டியன் அடிக்கடி வெளியே சென்று விட்டு சில நாட்கள் கழித்து வீட்டிற்கு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 28-ம்தேதி அருள் ராஜ் திடீரென மாயமாகியுள்ளார். அவரை வேல்முருகன் தேடிய நிலையில் அவர் கிடைக்காததால் தெர்மல் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனிடையே நேற்று அங்குள்ள பண்டுகரை ஓடை பகுதியில் நாய்கள் சண்டையிட்டவாறு குறைத்துக் கொண்டிருந்தது.
இதனை அப்பகுதியினர் பார்த்தபோது ஒரு வாலிபர் கொன்று புதைக்கப்பட்ட நிலையில் கை மட்டும் வெளியே தெரிந்துள்ளது. இது குறித்து உடனடியாக தெர்மல் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர்கள் சோபா ஜென்ஸி, ஜெயந்தி மற்றும் தாசில்தார் முரளிதரன், கிராம நிர்வாக அதிகாரி பிரேமலதா ஆகியோர் விரைந்து சென்றனர்.
இரவு நேரம் என்பதால் போலீசார் இன்று காலை அங்கு சென்று புதைக்கப்பட்ட உடலை தோண்ட முடிவு செய்தனர். இதற்கிடையே அருள் ராஜின் அண்ணனான பாண்டியனும் மாயமானார். இதனால் அவரையும் போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் இன்று பண்டுகரை ஒடை பகுதியில் புதைக்கப்பட்ட வாலிபர் உடலை தோண்டி எடுக்கும் பணி நடந்தது. அப்போது அங்கு 2 பேர் உடல்கள் மீட்கப்பட்டது.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திய போது கொன்று புதைக்கப்பட்டது அருள் ராஜ் மற்றும் அவரது அண்ணன் பாண்டியன் என்பது தெரியவந்தது. தொடர்ந்து பாண்டியன், அருள்ராஜ் ஆகியோரது உடல்கள் அதிகாரிகள் முன்னிலையில் அடுத்தடுத்து வெளியே எடுக்கப்பட்டது. இவர்கள் இருவரையும் ஒரே கும்பல்தான் கொன்று புதைத்திருக்க வேண்டும் என போலீசார் கருதுகின்றனர்.
தொடர்ந்து நடத்திய விசாரணையில் கடந்த 26-ம் தேதி அருள் ராஜூக்கும், அப்பகுதியை சேர்ந்த சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது தெரியவந்தது. இது தாெடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த செந்தூர்பாண்டி மகன் ரிதன் (25) உட்பட 3பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரிதனின் அண்ணன் காசி பாண்டியன் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் தற்கொலை செய்து காெண்டாராம். இதற்கு அருள் ராஜ் மற்றும் அவரது அண்ணன் பாண்டியன் ஆகியோர்தான் காரணம் என்று கருதி இருவரையும் கொலை செய்ததாக தெரியந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


