தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் புதிய டீன் ஆக மயக்கவியல் துறை பேராசிரியர் டாக்டர் இ.எபினேசர் ஜோயல் குமார் பொறுப்பேற்றுள்ளார்.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியின் டீனாக பணிபுரிந்து வந்த சிவக்குமார் அண்மையில் தனது அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இதையடுத்து சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் மயக்கவியல் துறை பேராசிரியராகப் பணிபுரிந்து வந்த டாக்டர் இ.எபினேசர் ஜோயல் குமார் புதிய டீனாக நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, அவர் இன்று காலை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் முறைப்படி கோப்புகளில் கையெழுத்திட்டுப் புதிய டீன் ஆகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
புதிய டீன் ஆகப் பொறுப்பேற்றுக் கொண்டதைத் தொடர்ந்து, அவர் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினரும், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சருமான ஸ்ரீநாத்தை நேரில் சந்தித்து மரியாதை நிமித்தமாகப் பூங்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார். இந்த சந்திப்பின் போது தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி, டாக்டர் பத்மநாபன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


