
இதுவரை..
குவைத் செல்வதற்கு டாக்டர் சுதாகர் மூலமாக எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை எங்களுக்கு வழங்கியவர்கள் குவைத் தமிழ்நாடு பொறியாளர்கள் சங்கத்தினர். இந்த பயணத்தினை பற்றி எழுதி வருகறேன். தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து துவங்கி சென்னை விமான நிலையம் வந்து தற்போது குவைத் நோக்கி கிளம்பியுள்ளோம் & முத்தாலங்குறிச்சி காமராசு.
இனி.
சிறிது நேரம் கண்மூடி உட்கார்ந்த பிறகுதான் பழைய நிலைக்கு வந்தேன்.
இப்போது டாக்டர் சுதாகர் என்னிடம் பேச ஆரம்பித்தார்.
குவைத் மாநகரை பொறுத்தவரை ஆராய்ச்சி அறிஞர்களுக்கு நல்ல மதிப்பு கொடுப்பார்கள் என்றர்ர்.
வெளிநாட்டுக்கு செல்லும் போது எல்லோருக்கும் விமான நிலையத்தில் பாதுகாப்பை கருதி சோதனை ஒன்றுபோலத்தானே இருக்கும். ஆனால் டாக்டர் சுதாகர் கடந்த முறை வந்த போது மரியாதை நன்றாக இருந்துள்ளது.
இதைப்பற்றி டாக்டர் சுதாகர் கூறினார். “நான் சென்ற முறை குவைத் சென்றபோது விதிமுறைகள் எதுவும் எனக்கு கடைபிடிக்கவில்லை. விமான நிலையத்தில் இறங்கியவுடன் ஒரு வாலிபன் என்னை நோக்கி காத்து இருந்தான். என்னை கண்டவுடன் எளிதாக அடையாளம் கண்டு கொண்டான். என்னிடம் இருந்த கலர் விசாவை வாங்கிக்கொண்டு, அவன் ஒரிஜினல் விசாவை கொடுத்தான். அதன் பின் என்னை விமான நிலையத்திற்கு வெளியே அழைத்து வந்துவிட்டான். எனக்கு எந்த சோதனையும் பெரியளவில் இல்லை.
விமான நிலையத்திற்கு வெளியே வந்ததும் என் பெட்டியையும் பாஸ்போர்ட்டையும் என்னிடம் கொடுத்து விடை பெற்றான். அப்படியொரு சிறந்த மரியாதை கிடைத்தது. அவன் என்னை தாங்கள் ஒரு ஆராய்ச்சியாளர். உங்களை வரவேற்கிறேன் என கூறினான். இந்த மாதிரியான வரவேற்பு எனக்கு வேறு எந்த நாட்டிலும் இதுவரை கிடைத்ததில்லை. என பெருமை பட்டுக்கொண்டார்.
கற்றவர்களுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு. அதுவும் ஆய்வாளர் , ஆராய்சியாளர் என்றால் கேட்கவா வேண்டும். மண் புழு ஆராய்ச்சியாளர். இந்த ஆராய்ச்சி மூலம் மனிதனின் ஆயுளை கூட்ட முடியுமா? என ஆய்வு செய்து வருபவர். எனவே அவருக்கு உரிய மரியாதை கிடைத்தது எனக்கு மகிழ்ச்சியாகவே இருந்தது. இதே போல் நாளை நாங்கள் இறங்கும் போது அதிகாலையில் குவைத்தில் மரியாதை கிடைக்கும். அவருடன் செல்வதால் எனக்கும் கிடைக்கும் என மகிழ்ச்சியுடன் சிறிது நேரம் கண்ணை மூடினேன்.
குவைத் நாடு எப்படி இருக்கும். வரும் போது தூத்துக்குடி , சென்னை விமான நிலையங்களை குறித்து அசைப் போட்டோம். அதுபோல குவைத் விமான நிலையம் எப்படி இருக்கும் இதற்காக நான் நான் ஏற்கனவே கூகுளில் பார்த்த விசயங்களை மீண்டும் அசைப்போட்டேன்.
குவைத்தில் 3 விமான நிலையங்கள் உள்ளதாக கூகுள் சொல்கிறது.
குவைத் விமான நிலையங்களில் ஒன்று சர்வதேச விமான நிலையம். இரண்டு இராணுவ அடிப்படையிலான விமான நிலையங்கள் உள்ளன.
இதில் குவைத் சர்வதேச விமான நிலையம் பெரியது. இந்த விமான நிலையத்தினை தவிர மற்ற இரண்டு விமான நிலையமும் சிறியது.
குவைத் சர்வதேச விமான நிலையத்தின் தற்போதைய முக்கிய அமைப்பு கென்சோ டாங்கே என்பவரால் வடிவமைக்கப்பட்டு 1979 இல் திறக்கப்பட்டது. குவைத் சர்வதேச விமான நிலையம் குவைத் நகரின் மையத்திலிருந்து 15.5 கிமீ தெற்கே அமைந்துள்ளது.
இந்த விமான நிலையம் குவைத்தின் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றாக உள்ளது. ஏனெனில் இது வணிக ரீதியான வருகை மற்றும் புறப்பாடுகளுக்கான ஒரே நுழைவாயிலாக செயல்படுகிறது. இந்த விமான நிலையம் ஆண்டுக்கு 13 மில்லியனுக்கும் அதிகமான பயணிகளைக் கையாளுகிறது. குவைத் கசாலி சாலையில் இந்த விமான நிலையம் அமைந்துள்ளது.
கசாலி என்றவுடன் எனக்கு நான் வசிக்கும் செய்துங்கநல்லூரில் எனக்கு எழுத்துப்பணிக்காக நிறைய உதவி செய்து வரும் அண்ணான் காஜி ஏ.வி.ஏ.கசாலித்தான் நினைவுக்கு வந்தார். இவர் பா.ம.க.மாநில துணைத்தலைவராக வும் உள்ளார். சினிமா படத்தயாரிப்பாளராகவும், நடிகராகவும் உள்ளார்.
கசாலி என்ற சொல் தூத்துக்குடி மாவட்டத்தில் மிகவும் பிரபலம். தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகில் இருவப்பபுரத்தில் உள்ள பெரும்படை சாஸ்தா கோயில் அருகே உள்ள கசாலி என்னும் மகான் அடக்கமாகி உள்ள தர்கா உள்ளது. எனவே கசாலி சாலை என்றவுடன் எனக்கு அந்த தர்கா நினைவுக்கு வந்தது.
ஆனாலும் உலகம் முழுவதும் போற்றப்படுகிற, மகான் காசலி பற்றி தெரிந்து கொள்ள எனக்கு ஆசை இருந்தது.
கசாலி அரபி மொழியில் கஸ்ஸாலி என்றும், பெர்ஸிய மொழியில் அல்கஸெலஸ் அல்லது அல்கெஸெல் என்றும் அழைக்கப்படுகிறார். இடைக்கால மேற்கத்திய உலகில் இவர் பெர்ஸிய இறையியல் வல்லுனராகவும், சிறந்த சட்ட இயல் வல்லுநராகவும், தத்துவ ஆராய்ச்சியாளராகவும், சாமானிய அறிவுநிலை கடந்த ஆழ்ந்த உட்பொருளுடைய ஆன்மிகச் சிந்தனையாளராகவும் திகழ்ந்தார்.
கசாலி வரலாற்று ஆசிரியர்களால் “முகம்மது நபிக்குப்பின் செல்வாக்கு மிக்க ஒரே முஸ்லிம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளார். பாரம்பரிய முறைப்படி, சமூகத்தின் நம்பிக்கையை மீட்க, ஒவ்வொரு நூற்றாண்டிலும் ஒருவர் தோன்றுவார். அவர்களுள், இவரும் ஒருவர் என்று கருதப்படுகிறார்.
கசாலி அனைவராலும், “இஸ்லாமியத்தின் ஆதாரம் ” என்று மிகுந்த மரியாதையுடன் அழைக்கப்படுகிறார். அவரது படைப்புகள், சமகாலத்தவர்களால் மிகவும் பாராட்டப்பட்டன.
இவர் தத்துவத்திலிருந்து அறிவியலை பிரித்து ஆய்வு செய்ய வேண்டும் என வாதிட்டவர். அவரது பணி, இஸ்லாமிய தத்துவத்தின் போக்கை வெற்றிகரமானதாக மாற்றியது.
மக்காவிற்கு புனித யாத்திரை செல்லும் நோக்கில் பாக்தாத் சென்றார். தன் குடும்பத்தாருக்கு தக்க ஏற்பாடுகள் செய்துவிட்டு, தன் செல்வத்தை மற்றவர்களுக்கு வாரி இறைத்து விட்டு, தவசி போல் வாழ்ந்தார். சில ஆண்டுகளுக்கு தனிமையை ஏற்றார். அப்போது அரசு நிறுவனங்களில் கற்பித்தல், தொடர்ந்து இதழ்கள் வெளியிடல், பார்வை யாளர்களைச் சந்தித்தல், ஸாவியா எனும் தனியார் மதரஸாக்களில் கற்பித்தல் அவர் கட்டியிருந்த கான்ஹா எனும் சூபி மடாலயப் பணி போன்ற பணிகளை திறப்பட செய்தார். எவ்வளவு பெரிய மகான். இவர்பெயர் தான் குவைத் விமான நிலையம் உள்ள சாலைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இவர் பெயரில்தான் நமது தயாகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் கசாலி தர்கா உள்ளது. இவர் பெயர் தாங்கியவர்கள் நான் வசிக்கும் செய்துங்கநல்லூர் ஊர்காரர்கள் என நினைக்கும்போது மிகவும் சந்தோசமாக இருந்தது. அண்ணன் கசாலி போல், நண்பன் எப்.எம்.காசலி ஒருவரும் எங்கள் ஊரில் உண்டு.
குவைத்தில் உள்ள உள்நாட்டு விமான நிலையங்களின் பட்டியலில் அஹ்மத் அல்-ஜாபர் விமான தளம் அமைந்துள்ளது.
அஹ்மத் அல்-ஜாபர் விமான தளம் குவைத்திலிருந்து 51.5 கிமீ தொலைவில் உள்ளது. யுனைடெட் ஸ்டேட்ஸ் விமானப்படையின் 332வது ஏர் எக்ஸ்பெடிஷனரி விங் மே 2016 இல் அஹ்மத் அல்-ஜாபர் ஏர் பேஸுக்கு இடம் பெயர்ந்தது. இந்த விமானப்படை தளம் அமெரிக்க விமானப்படை மற்றும் அதன் கூட்டாளிகளின் செயல்பாடுகளுக்காக பயன் படுத்தப்பட்ட ஒரு பகுதியையும் கொண்டுள்ளது. குவைத்தில் தவில் என்ற இடத்தில் இந்த விமான நிலையம் உள்ளது. அஹ்மத் அல்-ஜாபர் விமான தளம் இராணுவ சேவைகளை வழங்குகிறது.
குவைத்தில் அமைந்துள்ள அலி அல் சலேம் விமான தளம் என்பது ஈராக் எல்லையில் இருந்து சுமார் 37 கிமீ தொலைவிலும் அல் ஜஹ்ராவிற்கு மேற்கே 15 கிமீ தொலைவிலும் அமைந்துள்ள ஒரு இராணுவ விமான தளமாகும். இந்த விமான நிலையம் டிசம்பர் 2004 இல் செயல்படத் தொடங்கியது . வளைகுடா போர், ஆபரேஷன் டெசர்ட் ஃபாக்ஸ் மற்றும் ஆபரேஷன் டெலிக் போன்ற நிகழ்வுகளுக்கு முந்தைய குறிப்பிடத்தக்க வரலாற்றைக் கொண்டுள்ளது.
இந்த விமான நிலையத்தில் ஒரு முனையம் உள்ளது.
குவைத் சர்வதேச விமான நிலையம் தான் குவைத்தில் பிரதான விமான நிலையமாக உள்ளது. இதன் வழியாகத்தான் அனைத்து வெளிநாடுகளுடன் தொடர்ப்பு கொண்டு உள்ளது.
இந்த விமான நிலையத்தில் தான் நாம் போய் இறங்கபோகிறோம். சுமார் 5 மணி நேரம் எங்களது விமான பயணம். விமானம் பறந்தவுடனே போன் செயலிழந்து விட்டது. குவைத் சென்ற பிறகு அங்குள்ள போனில்தான் பேச முடியும்.அல்லது யார் போனிலாவது இண்டர் நெட் வாங்கி நமது வாட்சப் இல் ஊரில் உள்ளவரிடம் பேசலாம்.
சிறிது நேரம் கண்ணை மூடி தூங்கலாம் என நினைத்தேன். அந்த வேளையில் குவைத் சர்வதேச விமான நிலையம் குறித்து கூடுதல் தகவலை நான் அசைப்போட்டேன்.
குவைத் சர்வதேச விமான நிலையம் என்பது குவைத் நகரின் மையத்திலிருந்து 15.5 கிலோமீட்டர் (9.6 மைல்) தெற்கே அமைந்துள்ள சர்வதேச விமான நிலையம் ஆகும். இதன் பரப்பளவு 14.6 சதுர மைலாகும். இது குவைத் ஏர்வேஸ் மற்றும் ஜசீரா ஏர்வேஸ் ஆகியவற்றின் முதன்மை மையமாக செயல்படுகிறது . விமான நிலைய வளாகத்தின் ஒரு பகுதி அப்துல்லா அல்-முபாரக் விமான தளம் என நியமிக்கப் பட்டுள்ளது , இதில் குவைத் விமானப்படையின் தலைமையகம் மற்றும் குவைத் விமானப்படை அருங்காட்சியகம் உள்ளது.
விமான நிலையம் முதன்முதலில் 1927&-1928 இல் தொடங்கப்பட்டது. – முதலில் பிரிட்டிஷ் இந்தியாவிற்கு செல்லும் வழியில் பிரிட்டிஷ் விமானங்களை நிறுத்துவதாக உபயோகப்படுத்தப்பட்டது . கென்சோ டாங்கே வடிவமைத்து 1979 இல் திறக்கப்பட்ட தற்போதைய முக்கிய விமான நிலையக் கட்டமைப்பு, நெதர்லாந்தின்Ballast Nedamஉடன் கூட்டு முயற்சியில் அல் ஹானி கட்டுமானத்தால் செயல்படுத்தப்பட்டு முடிக்கப்பட்டது .
பிப்ரவரி 27, 1991 அன்று, வளைகுடாப் போரின் இறுதி நாட்களில் , குவைத்தின் விடுதலையின் ஒரு பகுதியாக , விமான நிலையம் ஈராக் படைகளுக்கும் அமெரிக்க இராணுவ சிறப்புப் படைகளின் கூறுகளுக்கும் போர்களமாக மாறியது.
விமான நிலையம் 1999 முதல் 2001 வரை ஒரு பெரிய சீரமைப்பு மற்றும் விரிவாக்கத் திட்டத்திற்கு உட்பட்டது, இதில் முந்தைய வாகன நிறுத்துமிடம் அழிக்கப்பட்டு முனைய விரிவாக்கம் கட்டப்பட்டது.
குவைத் சர்வதேச விமான நிலையம் தற்போது ஆண்டுக்கு 13 மில்லியனுக்கும் அதிகமான பயணிகளைக் கையாள முடியும். ஒரு புதிய பொது விமான முனையம் 2008 இல் ஙிளிஜி திட்டத்தின் கீழ் முடிக்கப்பட்டது .
2011 ஆம் ஆண்டில், குவைத் சர்வதேச விமான நிலையத்தை விரிவுபடுத்தும் நோக்கத்தை சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அறிவித்தது. இதனால் அதிக பயணிகள் மற்றும் அதிக விமானங்களைக் கையாள முடிகிறது . அக்டோபர் 3, 2011 அன்று, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் புதிய முனையம் 2012 இல் கட்டுமானத்தைத் தொடங்கியது. அதன் முதல் கட்டத்தில் 14 மில்லியன் பயணிகளைக் கையாளும் தொகையை 25 மில்லியனாக விரிவுபடுத்தும் விருப்பத்துடன் ஆண்டுதோறும் அதிகரிக்கும் என்றும் அறிவித்து செயல்படுத்தியது.
டிசம்பர் 2012 இல், குவைத் பொதுப்பணித்துறை அமைச்சகம், குவைத் சர்வதேச விமான நிலையத்தில் புதிய முனையம் 2016 ஆம் ஆண்டு இறுதிக்குள் கட்டி முடிக்கப்படும் என்று அறிவித்தது. இதன் செலவு சுமார் 900 மில்லியன் குவைத் தினார் ஆகும். மே 20, 2013 அன்று, சிவில் ஏவியேஷன் பொது நிர்வாகத்தின் செயல்பாட்டு மேலாண்மை இயக்குநர் எஸ்சம் அல்-ஜமில், சில விமானங்கள் குவைத் விமான நிலையத்தின் பிரதான முனையத்திற்குப் பதிலாக ஷேக் சாத் டெர்மினலுக்குத் திருப்பிவிடப்படும் என்று அறிவித்தார்.
மே 22, 2018 அன்று, ஜசீரா ஏர்வேஸ் குவைத் சர்வதேச விமான நிலையத்தில் டெர்மினல் 5 என அழைக்கப்படும் முக்கியமான முனையத்தை அறிமுகப்படுத்தியது. இது தற்போதுள்ள பிரதான கட்டிடத்திற்கு நேரடியாக அருகில் அமைந்துள்ளது மற்றும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் பிரத்யேக வருகை மற்றும் புறப்பாடு பகுதிகள், சுங்கம் மற்றும் அனைத்து ஆதரவையும் இந்த முனையம் கொண்டுள்ளது. பிரதான கட்டிடத்தில் நெரிசலைக் குறைக்கும் வகையில் இந்த முனையம் செயல்படுகிறது.
ஆகஸ்ட் 8, 2018 அன்று, குவைத்தின் தேசிய விமான நிறுவனமான குவைத் ஏர்வேஸ் மூலம் இயக்கப்படும் அனைத்து விமானங்களுக்கும் சேவை செய்வதற்காக டெர்மினல் 4 திறக்கப்பட்டது . 4 ஆண்டுக்கு 4.5 மில்லியன் பயணிகளைக் கையாளும் மற்றும் டெர்மினல் 1 இல் நெரிசலைக் குறைக்கும். முனையத்தை ஒட்டிய பிரத்யேக மேற்பரப்பில் 2,450 கூடுதல் கார் பார்க்கிங் இடங்கள் உள்ளன மற்றும் ஒரு பாலம் கட்டிடத்துடன் இணைக்கப் பட்டுள்ளன. இதுபோல பல முன்னேற்றம் குவைத் விமான நிலையத்தில் அமைந்துள்ளது.
குவைத் சர்வதேச விமான நிலையத்தில் அனைத்து வணிக விமானங்களும் 2020 ல் கோவிட் தொற்றுநோயின் விளைவாக நிறுத்தப்பட்டன. ஒரு காலத்தில் கடல் வழி போக்கு வரத்தாக இருந்த காலம் மாறி தற்போது விமானம் மூலம் தான் குவைத் போக்குவரத்து என்று காலங்கள் மாறி விட்டது.
இந்த தகவல்கள் எல்லாமே நான் கூகுளில் இருந்து திரட்டியவை. குவைத்தை பொறுத்தவரை விமான நிலையம் மட்டுமே பிரதானமானது. இங்கு ரயில் சேவை கிடையாது. பெரும்பாலுமே கார் சேவைதான். அதோடுமட்டுமில்லாமல் மோட்டார் பைக் கூட அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் காணப்படுகிறது. சிலருக்கு உணவு கொண்டு இதை ஏற்கனவே டாக்டர் சுதாகர் கூறினார்.
கண்ணை மூடி சன்னல் வழியே பார்த்தேன். கடல் வழியாக எங்கள் விமானம் பறந்து கொண்டிருந்தது தெரிந்தது. சில இடங்களில் நிறைய விளக்குகள் ஒளிர்ந்தன. அப்படியென்றால் குவைத் வந்து விட்டதோ என நினைத்தால் ,தொடர்ந்து விமானம் 1 மணி நேரம் பறந்து கொண்டே இருந்தது.
இந்திய நேரப் படி அதிகாலை சுமார் 4.30 மணியளவில் இந்த விமானம் குவைத் போய்ச் சேர்ந்தது.
நமக்குச் சூரியன் உதித்த அடுத்த 2 அரை மணிநேரம் கழித்துத்தான் குவைத்தில் சூரியன் உதிக்கிறது.
அதனால் நம் நேரமான காலை 4.30 மணியிலிருந்து 2.30 மணி நேரத்தைக் கழிக்க வேண்டும். இந்தக் கணக்குப்படி, நாங்கள் குவைத் வந்தடைந்தது, குவைத் நேரப்படி அதிகாலை 1.30 மணியாகும்.
விசாச் சரிபார்ப்பிற்குப் பின்னர் எங்கள் பெட்டிகளைப் பெற்றுக் கொண்டு விமான நிலையத்தை விட்டு வெளியே வாசல் நோக்கி நடந்தோம். வரும் வழியில் எங்கள் கைப்பைகளைச் சோதனை செய்து பின்னர் குவைத்திற்குள் அனுமதித்தனர்.
இந்த வேளையில் கடந்த முறை மாதிரி எந்த இளைஞனும் எங்களை தேடி வரவில்லை. மாறாக எங்கள் பாஸ்போர்ட், விசாவை காட்டியவுடன் எங்களை வரிசையில் நிற்க விடாமல் மற்றொரு இடத்துக்கு அனுப்பி வைத்தனர். அங்கு யாரும் இல்லை. நாங்கள் மட்டும் தனியாக நின்று கொண்டிருந்தோம். 15 நிமிடம் இருக்கும் ஒரு விமானப் பணிப்பெண் எங்களை தேடி பரபரப்பாக ஓடியே வந்தார்.
காமராஜ். என என் பெயரை வித்தியாசமாக உச்சரித்தப்படி வந்தவர். எங்களிடம் நாங்கள் கொண்டு சென்ற கலர் விசாவை வாங்கி கொண்டு, அவர் அதே போல் ஒரிசினல் விசா ஒன்றை எங்களிடம் தந்து, எங்களை குவைத் நகருக்குள் அனுமதித்தார்.
நாங்கள் கொண்டு வந்த லக்கேஜ்க்காக காத்து இருந்தோம். அதுவும் சிறிது நேரத்தில் வந்து சேர்ந்தது. அதன் பின் லக்கேஜ்யை எடுத்துக்கொண்டு வெளியே வந்தோம்.
எங்கள் வரவை எதிர்நோக்கி இரண்டு பொறியாளர்கள் காத்து நின்றனர். அதில் ஒருவர் அசோக்குமார், தமிழ்நாடு பொறியாளர்கள் சங்க பொதுச்செயலாளர். இவர் சுமார் 18 ஆண்டுகளாக குவைத் ஆயில் கம்பெனியில் பொறியாளராக வேலை பார்க்கிறார்.
மற்றவர் பாலசுப்பிரமணியன், தமிழ்நாடு பொறியாளர்கள் சங்கத்தின் துணைத்தலைவர். இரண்டு பேரையும் மகிழ்ச்சியுடன் சந்தித்தோம்.
அவர்கள் இருவரும் எங்கள் இருவருக்கும் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர்.
எங்களை அன்போடு குவைத் வரவேற்கிறது என்ற விளம்பர பலகை இருந்தது. அதன் முன்னால் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
நாங்கள் அதிகாலை நேரத்தில் எங்களது வலது காலை குவைத் மாநகரில் அடியெடுத்து வைத்தோம்.
ஈராக் மற்றும் சவூதி அரேபியாவிற்கு இடையில் அமைந்துள்ள குவைத், வானளாவிய கட்டிடங்கள், வசீகரிக்கும் அருங்காட்சியகங்கள் மற்றும் பலவற்றால் அலங்கரிக்கப்பட்ட நிலப்பரப்பைக் கொண்டுள்ளது. நாங்களும் குவைத் நகரை பற்றி நிறைய அறியவேண்டும். குவைத்தில் வாழும் தமிழ்நாடு பொறியாளர்களின் குடும்பத்தினை சந்திக்க வேண்டும். அதற்கான நடக்க விருக்கும் கூட்டத்தில் நமது தமிழர்களை சந்திக்க வேண்டும் என்ற ஆசையுடன் வெளியே வந்து காரில் ஏறினோம்.
பாலசுப்பிரமணியம் அய்யா அவரது காரில் செல்ல, எங்களை அழைத்துக்கொண்டு மற்றொரு காரில் அசோக் அய்யா கிளம்பினார்.
குவைத் சாலை மிக வித்தியாசமாக இருந்தது. கார் ஓட்டுனர் சீட் இடது புறமாக இருந்தது.
வித்தியாசமான அந்த அனுபவத்தினை ரசித்துக் கொண்டே நாங்கள் மூன்று நாளும் தங்கும் இடத்துக்கு எங்களை அழைத்துச் சென்றார் அசோக் குமார் அய்யா.
( குவைத் பயணம் தொடரும்)