தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கோடி ரூபாய் செலவில் பணிமனை அமைக்கப்பட்டது.
ஸ்ரீவைகுண்டத்தில் செயல்பட்டு வரும் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து தான் சாத்தான்குளம் பணிமனை திறந்த போது 6 பேருந்துகள் வழங்கப்பட்டது. தற்போது வரை சாத்தான்குளம் பணிமனையில் அதே 6 பேருந்துகள் மட்டுமே இயங்கி வருகிறது. இந்த பணிமனையில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் பேருந்துகளை நிறுத்திவிட்டு ஸ்ரீவைகுண்டம் பணிமனையில் பேருந்துகளுக்கு டயர் செய்யும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. அந்த தொழிற்சாலையை சாத்தான்குளம் பணிமனையில் செயல்படுத்த அரசு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில இன்று சாத்தான்குளத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், தமிழ்மாநில காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் என அனைத்து கட்சியினரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சாத்தான்குளத்தில் செயல்பட்டு வரும் பணிமனையில் கூடுதல் பேருந்து இயக்கவும், ஸ்ரீவைகுண்டம் பணிமனையில் செயல்பட்டு வரும் டயர் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை இங்கு அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக 21ம் தேதி சாத்தான்குளத்தில் அனைத்துக்கட்சிகள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


