
ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றில் நடைபெற உள்ள புஷ்கர திருவிழாவிற்காக தூய்மை பணி நடைபெற்ற பொழுது வனத்துறையினர் தடைவிதித்ததால் பொதுமக்கள்-பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தாமிரபரணி ஆற்றில் 144 ஆண்டுகளுக்கு பிறகு சிறப்பு புஷ்கர திருவிழா அக். 12ம் தேதி முதல் அக். 22ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு தாமிரபரணி ஆறு மற்றும் படித்துறைகளை சீரமைக்கும் பணிகள் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகின்றன.
புஷ்கர திருவிழா விழிப்புணர்வு ரத யாத்திரையும் சிறப்பு பூஜைகளும் ஸ்ரீவைகுண்டத்தில் நடைபெற்றது. வருகிற 26ம் தேதி கணபதி ஹோமம், கோ பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும் நடைபெற உள்ளன.
இந்நிலையில், புஷ்கர விழா கமிட்டியினர், மக்கள் நலச்சங்கத்தினர், வியாபாரிகள் சங்கத்தினர்கள் மற்றும் பக்தர்களும் பொது மக்களும் இணைந்து ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றில் நடைபெற உள்ள புஷ்கர விழா நிகழ்விடத்தில் தூய்மை பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று அப்பகுதியில் அடர்ந்து வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்றும் பணி நடைபெற்றது. அப்பொழுது, அங்கே வந்த வனத்துறையினர், அவ்விடம் வனத்துறைக்கு உட்பட்ட பகுதி என்பதால் எவ்வித பணியும் மேற்கொள்ள கூடாது என தடை விதித்தனர்.
வியாபாரிகள் சங்கத் துணைத் தலைவர் பாலசுப்பிரமணியன், மக்கள் நலச்சங்க ஒருங்கினைப்பாளர்களான வழக்குறைஞர் ரமேஷ், பிச்சைக்கண்ணன், சமூக ஆர்வலர் சந்துரு உள்ளிட்டவர்கள் வனத்துறையினரிடம், 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் விழா என்பதால் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடும் இடத்தில் தூய்மை பணிக்கு அனுமதி வழங்கும்படி கோரினர்.
இதற்கு மறுப்பு தெரிவித்த வனத்துறையினர் தூய்மை பணிக்கு அனுமதி மறுத்தனர். புஷ்கர விழாவை அரசே ஏற்று நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர் முத்தாலங்குறிச்சி காமராசு உயர்நீதி மன்ற மதுரை கிளையில் தொடர்ந்துள்ள வழக்கில், மத்திய மாநில அரசுகள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்நிலையில், தாமிரபரணி ஆற்றில் புஷ்கர விழா தூய்மை பணிக்கு வனத்துறையினர் தடைவிதித்ததால் பொது மக்கள்&பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஸ்ரீவைகுண்டம் அணையின் உட்பகுதியில் சுமார் ஒரு கி.மீ தூரம் வரையிலும் அணையின் கீழ் பகுதியில் குறிப்பிட்ட தூரம் வரையிலும் வனத்துறைக்கு உட்பட்ட பகுதியாக உள்ளது.
அணையின் உட்பகுதியில் தூர்வாரும் பணிக்கு வனத்துறையினர் தடைவிதித்து வந்த நிலையில் 2015ம் ஆண்டு பசுமை தீர்பாயத்தின் உத்தரவிற்கு பிறகே தூர்வாரும் பணி நடைபெற்றது.
இதைபோல், அணையின் கீழ் பகுதியில் இரண்டு பாலத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் அடர்ந்து வளர்ந்து இருந்த கருவேல மரங்களை அகற்ற கடந்த ஆண்டு அப்போதைய தாசில்தார் தாமஸ் பயஸ் அருள் தலைமையிலான வருவாய் துறையினர் முயற்சித்த பொழுதும் வனத்துறையினர் அனுமதி மறுத்தனர்.
பின்னர் அப்பொழுதைய கலெக்டர் வெங்கடேசின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து வனத்துறையினரே கருவேலமரங்களை அகற்றும் பணியை மேற்கொண்டனர். இதைபோல், புஷ்கர விழா தூய்மை பணியிலும் வனத்துறையினர் பங்கேற்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.