
கருங்குளம் ஒன்றியம் கலியாவூர் – காலங்கரை சாலை சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருங்குளம் ஒன்றியத்தில் கலியாவூர் பஞ்சாயத்து உள்ளது. இந்த பஞ்சாயத்துக்கு உள்பட்ட கிராமம் காலங்கரை, அம்மன்புரம், அம்பேத்கார்நகர், சின்னகலியாவூர். இந்த கிராமங்களை இணைக்கும் சாலை கலியாவூர் – காலங்கரை சாலை என அழைக்கப்படுகிறது. சுமார் 1 கிலோ மீட்டர் தொலை வில் உள்ள இந்த சாலை அமைக்கப்பட்டு 15 வருடங்களாகிறது. அதன் பிறகு இந்த சாலை சீரமைக்கப்படவில்லை. இந்த சாலை வழியாகத்தான் இக்கிராமங்களுக்கு போக்குவரத்து நடைபெறுகிறது. மருதூர் அணை கீழக்கால் கரை வழியாக செல்லும் சாலையும் இங்கிருந்து தான் பிரிகிறது. ஆனால் இந்த சாலை போக்குவரத்துக்கு லாயகற்று உள்ளது. குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. எனவே வாகனங்கள் இங்கு வந்து செல்ல இயலாத நிலையில் உள்ளன.
இதுகுறித்து சின்ன கலியாவூரை சேர்ந்த சரவணன் கூறும் போது, காலங்கரை கலியாவூர் சாலை மிக மோசமாக உள்ளது. இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பல முறை அதிகாரிகளிடம் புகார் கூறியும் நடவடிக்கை இல்லை. தற்போது இவ்வூருக்கு வந்து செல்லும் கல்வி பேருந்துகள், ஆட்டோ போன்றவை வர மறுக்கின்றனர். எனவே இக்கிராமங்களுக்கு முற்றிலும் வாகன போக்குவரத்து இன்றி போய் விட்டது. எனவே உடனே இச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரினார்.
இச்சாலையை உடனே சீரமைக்க வேண்டும் என பசுமை தமிழ் தலை முறை சார்பாக மாவட்ட ஆட்சி தலைவருக்கு மனு அனுப்பபட்டுள்ளது.