தூத்துக்குடியில் வ.உ.சிதம்பரனாரின் 155-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது உருவச் சிலைக்குப் பாலாபிஷேகம் செய்து மரியாதை செலுத்தப்பட்டது.
சுதந்திரப் போராட்ட வீரரும், ‘செக்கிழுத்த செம்மல்’ எனப் போற்றப்படுபவருமான ஐயா வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் 155-வது பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடியில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்குச் சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன.
வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 155-வது பிறந்தநாள் விழாவினையொட்டி, தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அவரது முழு உருவச் சிலைக்கு வெள்ளி குடத்தினைக் கொண்டு பால், பன்னீர் மற்றும் சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டுச் சிவனிய முறைப்படி சிறப்பு மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் ராகவேந்திரா, சிவலிங்கம், இந்து மக்கள் கட்சி செய்தித் தொடர்பாளர் சுடலை மணி, சஞ்சய், வேல் உள்ளிட்ட பலர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர். இவ்விழாவிற்கான அனைத்துச் சிறப்பு ஏற்பாடுகளையும் ‘தேசியத் தலைவர் ஐயா வ.உ.சிதம்பரம் பிள்ளை திருமந்திர நகர் – தமிழ்நாடு’ அமைப்பின் மாவட்டத் தலைவர் பாலமுருகன் சிறப்பாகச் செய்திருந்தார். நிகழ்ச்சியில் அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
சைவ வேளாளர் சங்கம்
சுதந்திரப் போராட்ட வீரர் ‘செக்கிழுத்த செம்மல்’ வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் 155-வது பிறந்தநாள் விழா, தூத்துக்குடி சைவ வேளாளர் சங்கம் சார்பில் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
இவ்விழாவிற்குத் தூத்துக்குடி சைவ வேளாளர் சங்கத்தின் தலைவர் டி.ஏ. தெய்வநாயகம் தலைமை தாங்கினார். சங்கத்தின் செயலாளர் மீனாட்சிநாதன், சைவ சித்தாந்த சபை தலைவர் சந்தானம் பிள்ளை மற்றும் குருபூஜை சங்க தலைவர் பிரம்மநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக வ.உ.சிதம்பரம் புதல்வர் வாலேஸ்வரனின் புதல்வி (வ.உ.சி.யின் பேரப் பெண்) மரகத மீனாட்சி மற்றும் அவரது கணவர் ராஜா ஆகியோர் பொள்ளாச்சியிலிருந்து வருகை தந்து கலந்து கொண்டனர்.
முன்னதாக, தூத்துக்குடி வடக்கு ரத வீதியில் உள்ள சைவ வேளாளர் சங்கத்தில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வ.உ.சிதம்பரம் பிள்ளையின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள வ.உ.சி.யின் முழு திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் சைவ வேளாளர் சங்கத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், தூத்துக்குடி மாநகர வ.உ.சி. நற்பணி மன்றத் தலைவர் குற்றாலிங்கம், செயலாளர் கார்த்திகேயன் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.மேலும், சைவ வேளாளர் சங்கச் சட்ட ஆலோசகர் சண்முகசுந்தரம், தூத்துக்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி மகமை சங்கச் செயலாளர் கந்தப்பன், தமிழ்நாடு சைவ வேளாளர் சங்க மாநில இளைஞரணிச் செயலாளர் பொதிகை கண்ணன் உள்ளிட்ட திரளான பொதுமக்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தூத்துக்குடி சைவ வேளாளர் சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளர்கள் செய்திருந்தனர்.


