தூத்துக்குடியில் உள்ள நியாயவிலைக் கடைகளில் கடந்த ஒரு வார காலமாகச் ‘சர்வர்’ மற்றும் இணையதளச் சேவை முடங்கியுள்ளதால், பொதுமக்களுக்கும் கடைப் பணியாளர்களுக்கும் இடையே தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு (ஸ்மார்ட் கார்டு) கைரேகை (பயோமெட்ரிக்) பதிவு செய்யப்பட்டு, இணையவழி மூலமாகவே அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி மாநகர் மற்றும் மாவட்டப் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் கடந்த ஒரு வார காலமாக இணையதளச் சேவை (Server Problem) மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
சர்வர் இயங்காததால் ஒரு நாளைக்கு ஒரு கடையில் 2 முதல் 6 குடும்ப அட்டைகளுக்கு மட்டுமே கைரேகை பதிவு செய்ய முடிவதாக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.பொருட்கள் வாங்க நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் பொதுமக்கள், கைரேகை பதிவு செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்புவதால், கடைப் பணியாளர்களுடன் தினந்தோறும் வாக்குவாதத்தில் ஈடுபடும் சூழல் உருவாகியுள்ளது.
தூத்துக்குடி பகுதியில் மட்டும் சுமார் 115 நியாயவிலைக் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த இணையதள முடக்கப் பிரச்சனைக்குத் தமிழக அரசு உடனடியாக நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்றும், இல்லையெனில் பொதுமக்கள் மற்றும் ஊழியர்களுக்கிடையே தேவையற்ற மோதல் போக்கு தொடரும் என்றும் நியாயவிலைக் கடைப் பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


