ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள புனித சந்தியாகப்பர் ஆலய ஆண்டுத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று (ஜூலை 16) அதிகாலை 5.15 மணிக்குத் திருப்பலியும், காலை 6.30 மணிக்கு ஊர் பொதுமக்கள் மற்றும் மீனவ மக்களுக்காகப் பங்குத்தந்தை தலைமையில் சிறப்புத் திருப்பலியும் நடைபெற்றன. மதியம் 12 மணிக்கும் சிறப்புத் திருப்பலி நடத்தப்பட்டது.
மாலை 4 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் புனித சந்தியாகப்பரின் சொரூபம் குருசு ஆலயத்திலிருந்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, மாலை 6 மணிக்குக் கோவிலை வந்தடைந்தது. இரவு 7.15 மணிக்குக் கொடிகள் மந்திரிக்கப்பட்டு கொடியேற்றப்பட்டது.
தொடர்ந்து மறையுரையும், நற்கருணை ஆராதனையும் நடைபெற்றன. இக்கொடியேற்ற நிகழ்வில் பெரியதாழை, உவரி, மணப்பாடு, ஆலந்தலை, படுக்கப்பத்து, இடிந்தகரை, கூடுதாலை, தூத்துக்குடி மற்றும் அமலிபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கடலோர மீனவ மக்கள் பங்கேற்றனர்.
விழா நாட்களில் தினமும் காலை 5.30 மணிக்குத் திருப்பலியும், மாலை 6.30 மணிக்குத் திருயாத்திரை திருப்பலியும் நற்கருணை ஆராதனையும் நடைபெற உள்ளன. விழாவின் முக்கிய நிகழ்வான சப்பர பவனி ஜூலை 25, 2026 அன்று நடைபெறுகிறது. அன்றைய தினம் அதிகாலை 4.30 மணி, காலை 5.10 மணி, காலை 5.50 மணி, காலை 7 மணிக்குச் சிறப்புத் திருப்பலிகள் நடைபெறும்.
தொடர்ந்து காலை 10 மணிக்கு ஆலயத் திருத்தேரில் மாதாவும், சப்பரத்தில் புனித சந்தியாகப்பரும் வீதிஉலா புறப்பாடு நடைபெற்று முக்கிய வீதிகள் வழியாகப் பவனியாகச் செல்ல உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளைக் குருசு ஆலய பங்குத்தந்தை, அருட் சகோதரிகள், பங்குபேரவையினர் மற்றும் ஊர்நலக் கமிட்டியினர் செய்து வருகின்றனர்.


