தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் பயணிகளின் வசதிகள் மற்றும் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து பொதுமக்களிடம் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் கருத்துக்களைக் கேட்டறிந்துள்ளார்.
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் செயல்பட்டு வரும் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து நகரப் பேருந்துகள், திருச்செந்தூர் மற்றும் திருநெல்வேலி மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தினசரி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தும் இப்பேருந்து நிலையத்தில், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா ஆகியோர் மாநகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வுக்குப் பின், பேருந்து நிலையத்தில் உள்ள ஆவின் பாலகம் முன்பு காத்திருந்த பயணிகளிடம் மேயர் ஜெகன் பெரியசாமி கலந்துரையாடினார். அப்போது பயணிகளுக்குத் தேநீர் வாங்கித் தந்து, அவர்களுடன் அமர்ந்து பேருந்து வசதிகள் மற்றும் பேருந்து நிலையக் குறைகள் குறித்த விவரங்களைக் கேட்டறிந்தார். மாநகராட்சி வளர்ச்சிக்குச் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தங்களது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தெரிவிக்கலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதன் அடிப்படையில் இந்த விபரங்கள் சேகரிக்கப்பட்டன.
ஆய்வின்போது மாநகராட்சி கவுன்சிலர் வைதேகி, வட்டச் செயலாளர் ரவீந்திரன், மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் ராஜசேகர், ஹரிகணேஷ், போல்பேட்டை பகுதி பிரதிநிதி ஜேஸ்பர் மற்றும் மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் உள்ளிட்ட மாநகராட்சிப் பணியாளர்கள் உடனிருந்தனர்.


