திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆனி வருஷாபிஷேகப் பெருவிழா நாளை (ஜூன் 27) சனிக்கிழமை விமரிசையாக நடைபெறவுள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆனி வருஷாபிஷேகத்தை முன்னிட்டு நாளை சிறப்பு வழிபாடுகள் மற்றும் விசேஷப் பூஜைகள் நடைபெறுகின்றன. இதுகுறித்து கோவில் இணை ஆணையர் அருணாசலம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் விழா கால அட்டவணை விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
வருஷாபிஷேக தினமான நாளை சனிக்கிழமை அதிகாலை 4:00 மணிக்குக் கோவில் நடை திறக்கப்படும். அதனைத் தொடர்ந்து அதிகாலை 4:30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், காலை 5:00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெறும். இதன் பின்னர் வருஷாபிஷேகத்திற்கான புனிதக் கும்பங்களுக்குச் சிறப்பு பூஜைகள் முறைப்படி செய்யப்படவுள்ளன.
காலை 8:00 மணிக்கு மேல் கோவில் மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை மற்றும் வெங்கடாஜலபதி ஆகிய தெய்வங்களின் சன்னதி விமானங்களுக்குப் புனித நீர் ஊற்றப்பட்டு வருஷாபிஷேகம் மிக விமரிசையாக நடத்தப்படும்.
இதன் பின்னர், மாலை 4:00 மணிக்குச் சிறப்புச் சாயரட்சை தீபாராதனை நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வாக, மாலை வழிபாடுகள் முடிந்தவுடன் குமரவிடங்கப்பெருமான் மற்றும் வள்ளி அம்மன் ஆகிய தெய்வங்கள் தனித்தனி தங்கமயில் வாகனங்களில் எழுந்தருளி உள் மற்றும் வெளி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்குக் காட்சியளிக்கவுள்ளனர்.


