தூத்துக்குடி புனித அன்னாள் சி.ஐ.எஸ்.சி.இ பள்ளியில் உலகப் போதைப்பொருள் ஒழிப்பு நாள் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று சிறப்பாக நடைபெற்றது.
தூத்துக்குடி புனித அன்னாள் சி.ஐ.எஸ்.சி.இ பள்ளியில் உலகப் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், மூத்த சிவில் நீதிபதியுமான சுபாஷினி தலைமை தாங்கிச் சிறப்புரையாற்றினார்.
அப்போது, பள்ளி மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் விற்பனை குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால், அது குறித்து உடனடியாகத் தாமதிக்காமல் அரசு அதிகாரிகளுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். நீதிபதியின் சிறப்புரைக்குத் தொடர்ந்து, அவர் தலைமையில் தமிழ்நாடு அரசின் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழியினை ஆசிரியர்களும் மாணவர்களும் இணைந்து எடுத்துக் கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, சூசைநாதர் மதுவிலக்கு இயக்கத்தின் முன்னாள் இயக்குநர் அருட்தந்தை ஜெயந்தன் டி கிரேஸ் கலந்துகொண்டு மாணவர்களிடையே உரையாற்றினார். அப்போது, மாணவர்கள் போதைப்பொருள் பழக்கங்களிலிருந்து முழுமையாக விலகி, நன்னெறி வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். குறிப்பாக, தற்காலக் கட்டத்தில் பெருகிவரும் ஊடகப் போதை, மதுப் போதை மற்றும் மனித வாழ்வை அடிமைப்படுத்தும் பல்வேறு தீய பழக்கங்களிலிருந்து இளைய சமுதாயம் வெளிவந்து அறநெறியான வாழ்க்கையை வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.
இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளித் தாளாளர் அருட்சகோதரி பிரமிளா பிரான்சிஸ், முதல்வர் அருட்சகோதரி விஜய் அன் மற்றும் ஆசிரியர்கள் ஒருங்கிணைத்துச் செய்திருந்தனர். பள்ளியின் அலுவலகப் பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் திரளாகக் கலந்துகொண்டு, போதைப்பொருள் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவோம் என்ற விழிப்புணர்வு முழக்கங்களுடன் நிகழ்ச்சியை நிறைவு செய்தனர்.


