நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் நடைபெறும் யார்டு மறுசீரமைப்பு மற்றும் 6-வது நடைமேடை அமைக்கும் பணிகள் காரணமாக திருச்செந்தூர் வழித்தடப் பயணிகள் ரயில்கள் ஜூன் 26 முதல் 30 வரை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதால், மாற்று ஏற்பாடாகக் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் எனப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் யார்டு மறுசீரமைப்புப் பணிகள் மற்றும் 6-ஆவது புதிய நடைமேடை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன்காரணமாக, ஜூன் 10 முதல் ஜூன் 30 வரை நெல்லை சந்திப்பு வழியாக இயங்கும் அனைத்து ரயில்களின் போக்குவரத்திலும் தற்காலிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகத் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
இப்பணிகளின் இறுதி கட்டமாக, நெல்லை சந்திப்பு – திருச்செந்தூர் இடையே இயங்கும் அனைத்துப் பயணிகள் ரயில்களும் வரும் ஜூன் 26 முதல் ஜூன் 30 வரை முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன. மேலும், திருச்செந்தூர் – பாலக்காடு எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16732) ஜூன் 26 முதல் 30 வரை திருச்செந்தூர் – வாஞ்சி மணியாச்சி இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. வண்டி எண் 20605 / 20606 விரைவு ரயில் ஜூன் 27 முதல் 30 வரை நெல்லைக்கு வராமல் விருதுநகரில் இருந்தே இயக்கப்பட உள்ளது.
ரயில் சேவைகளில் ஏற்பட்டுள்ள இந்த அதிரடி மாற்றங்கள் காரணமாகத் தினமும் திருச்செந்தூர், நாசரேத் மற்றும் நெல்லை இடையே பயணம் செய்யும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள் பெரிதும் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
எனவே, காலை மற்றும் மாலை நேரங்களில் ஏற்படும் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையிலும், பொதுமக்கள் சரியான நேரத்திற்குத் தங்களது பணிகளுக்குச் செல்லும் வகையிலும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் நெல்லை – திருச்செந்தூர், நாசரேத் மற்றும் இதர முக்கிய வழித்தடங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று பயணியர் வலியுறுத்தியுள்ளனர்.


