தூத்துக்குடி அருகே புதுக்கோட்டை, முடிவைத்தானேந்தல் உள்ளிட்ட பகுதிகளில் புழுதி மணலுடன் வீசிய ஆக்ரோஷமான சூறாவளி காற்றில் சிக்கி 87 வீடுகளின் மேற்கூரைகள் பறந்து சேதமடைந்தன. மேலும், மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் முறிந்து விழுந்ததில் மொத்தம் 7 பேர் காயமடைந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாகக் காணப்பட்ட நிலையில், தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 40 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
நேற்று முன்தினம் மாலையில் தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை, வாகைகுளம், முடிவைத்தானேந்தல், கூட்டுடன்காடு ஆகிய கிராமங்களில் புழுதி மணலுடன் சூறாவளி காற்று ஆக்ரோஷமாகச் சுழன்று வீசியது. இக்காற்றின் வேகத்தால் பல்வேறு இடங்களில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. முதற்கட்டமாக 6 பேர் காயமடைந்த நிலையில், மேற்கூரை விழுந்ததில் மேலும் ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு மருத்துவக் குழுவினர் நேரடியாகச் சென்று சிகிச்சை அளித்தனர்.
வருவாய்த்துறை கணக்கெடுப்பு:
சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தூத்துக்குடி வட்டாட்சியர் திருமணி ஸ்டாலின் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். இதில், முடிவைத்தானேந்தல் பகுதியில் 82 ஓடு மற்றும் ஆஸ்பெஸ்டாஸ் வீடுகளும், கூட்டுடன்காடு பகுதியில் 5 வீடுகளும் என மொத்தம் 87 வீடுகள் சேதமடைந்துள்ளது உறுதி செய்யப்பட்டது.
இப்புயல் காதால் 6 உயர் அழுத்த மின்கம்பங்கள், 15 குறைந்த மின்னழுத்த மின்கம்பங்கள் உடைந்து சேதமடைந்தன. இதனால் பெரும்பாலான கிராமங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேலும் 250 மரங்கள் வேரோடு சரிந்தும், 200-க்கும் மேற்பட்ட இடங்களில் மின்சார ஒயர்கள் துண்டிக்கப்பட்டும் கிடந்தன. இதனை மின்வாரியத்தைச் சேர்ந்த 70-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இரவு முழுவதும் பணியாற்றி, மின்கம்பங்களை நட்டு மின் விநியோகத்தைச் சீரமைத்தனர்.
கண் இமைக்கும் நேரத்தில் வந்த சுழல் காற்றால் பெரும் அச்சமடைந்ததாகத் தெரிவித்துள்ள அப்பகுதி மக்கள், சேத கணக்கெடுப்பு பணிகளை விரைந்து முடித்து அரசு தங்களுக்கு உரிய நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.


