சாத்தான்குளம் வட்டாரத்தில் உள்ள முக்கியச் சிவன் கோயில்களில் ஆனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
நடராஜரின் பஞ்ச விக்ரஹ ஸ்தலங்களில் ஒன்றான கட்டாரிமங்கலம் சிவகாமி அம்பாள் சமேத அழகியகூத்தர் திருக்கோயிலில் நேற்று திங்கட்கிழமை ஆனித் திருமஞ்சன சிறப்பு வழிபாடு நடைபெற்றது. காலையில் அழகிய கூத்தர் அருட்பணி மன்றத்தினரின் பன்னிரு திருமுறை விண்ணப்பத்துடன் பூஜைகள் தொடங்கின. தொடர்ந்து, நடராஜப் பெருமானுக்குப் பல்வேறு வகையான சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. மதியம் 1:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளைக் கோயில் செயல் அலுவலர் மற்றும் அறங்காவலர் குழு தலைவர் நடராஜபிள்ளை உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.
வைரவம் ஞானாதீஸ்வரர் கோயில்:
சாத்தான்குளம் அருகே உள்ள வைரவம் ஞானாதீஸ்வரர் சமேத சிவகாமி அம்மன் கோயிலில் மாலை நேரத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இங்குள்ள நடராஜப் பெருமானுக்குப் பல்வேறு திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு, அலங்கார தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் அம்பாள், சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன.
வரகுணபாண்டீஸ்வரர் கோயில்:
சாத்தான்குளம் அருகே உள்ள பள்ளக்குறிச்சி வரகுணபாண்டீஸ்வரர் சமேத வாடாமலையம்மன் கோயிலில் ஆனித் திருமஞ்சனத்தை முன்னிட்டு நடராஜப் பெருமானுக்குப் பல்வேறு வகையான அபிஷேகங்கள் மற்றும் உச்சிக்காலச் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. இந்த மூன்று சிவன் கோயில்களிலும் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டு நிகழ்வுகளில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


