தூத்துக்குடியில் இன்று திடீரென வீசிய பலத்த சூறாவளிக் காற்றில் விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காகப் போடப்பட்டிருந்த தற்காலிகத் தகர மேற்கூரை பறந்து வந்து விழுந்த விபத்தில் 6 பேர் படுகாயமடைந்தனர்.
தூத்துக்குடி வாகைகுளம் சுங்கச்சாவடி பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை திடீரெனப் பயங்கர வேகத்தில் பலத்த சூறாவளிக் காற்று வீசியது. அப்போது அந்தப் பகுதியில் அமைந்துள்ள தூத்துக்குடி விமான நிலையப் பணிகளுக்காகத் தற்காலிகமாகப் போடப்பட்டிருந்த தகர வீடுகளின் மேற்கூரைகள், காற்றின் வேகம் தாங்காமல் திடீரெனப் பெயர்ந்து காற்றில் பறந்து வந்தன. அவை அங்குள்ள ‘பீடவுன்’ பகுதியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் மீது விழுந்து விபத்தை ஏற்படுத்தின.
இவ்விபத்தில் வடக்கு காலாங்கரையைச் சேர்ந்த சண்முகராஜ் மகன் மோகன்குமார், காலாங்கரையைச் சேர்ந்த முனியசாமி மகன் ஐயப்பன் ஆகிய வெல்டிங் தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். மேலும், ‘பீடவுன்’ தீம் பார்க்கில் இருந்த திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் தாலுகா தருவை எம்எஸ்பி நகரைச் சேர்ந்த தங்கராஜ் மனைவி ஆறுமுகத்தாய், அவரது மகள் ஆகாஷினி மற்றும் நெட்டூர் மாதாகோவில் தெருவைச் சேர்ந்த ஜான் பிரிட்டோ, அவரது மனைவி விரோனிகா ஆகியோரும் இவ்விபத்தில் சிக்கிக் காயமடைந்துள்ளனர்.
தற்போது அவர்கள் 6 பேரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுத் தீவிர சிகிச்சையில் உள்ளனர். இச்சம்பவம் குறித்து புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


