அறுபடை வீடுகளில் இரண்டாம் வீடான புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் புதிய இணை ஆணையராக அருணாசலம் பொறுப்பேற்றுக்கொண்டார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அண்மையில் எழுந்த சில நிர்வாக ரீதியிலான புகார்களைத் தொடர்ந்து, கோவில் இணை ஆணையர் உட்பட 2 அதிகாரிகள் அதிரடியாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
அதன்படி, திருச்செந்தூர் கோவிலில் இணை ஆணையராகப் பணியாற்றி வந்த ராமு, சென்னை திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில் இணை ஆணையராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்குப் பதிலாக, திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில் இணை ஆணையராகப் பணியாற்றி வந்த அருணாசலம் திருச்செந்தூர் கோவிலின் புதிய இணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, நேற்று மாலையில் திருச்செந்தூர் கோவில் அலுவலகத்தில் புதிய இணை ஆணையராக அருணாசலம் தனது பணிகளைத் தொடங்கினார். அவரிடம், இடமாறுதலாகிச் செல்லும் ராமு கோவில் நிர்வாகப் பொறுப்புகளை முறைப்படி ஒப்படைத்தார்.
இந்நிகழ்வில், கோவிலின் முதுநிலை கணக்கு அலுவலர் ராஜாராமன், அலுவலகக் கண்காணிப்பாளர் ரோகிணி, கண்காணிப்பாளர்கள் விவேக், அற்புதமணி மற்றும் கோவில் பணியாளர்கள் பலர் கலந்துகொண்டு புதிய இணை ஆணையருக்குத் தங்களின் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.


