சாத்தான்குளம் அருகே அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியை இடமாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்து, பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே கடாட்சபுரம் முத்துகிருஷ்ணா புரத்தில் தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல நிர்வாகத்திற்கு உட்பட்ட டி.டி.ஏ. தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. ஈரப்பிரிவு (இரு ஆசிரியர்கள்) கொண்ட இந்த அரசு உதவிபெறும் பள்ளியில் 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஸ்டெபி எமீமா தலைமை ஆசிரியையாகப் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், திருமண்டல நிர்வாகத்திற்கு உட்பட்ட பள்ளிகளில் அண்மையில் ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதில், இப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஸ்டெபி எமீமா, வல்லநாடு பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கு அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார். இந்த உத்திரவிற்குப் பெற்றோர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
தலைமை ஆசிரியை ஸ்டெபி எமீமாவை மீண்டும் இதே பள்ளியிலேயே பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி, நேற்று பெற்றோர்கள் தங்களது மாணவ, மாணவிகளைப் பள்ளிக்கு அனுப்பாமல் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு அப்பகுதி கிராம மக்களும் முழுமையாக ஆதரவு தெரிவித்தனர்.
பெற்றோரின் இந்த பள்ளி புறக்கணிப்புப் போராட்டத்தின் காரணமாக, நேற்று ஒரு மாணவர் கூடப் பள்ளிக்கு வரவில்லை. அங்கு பணியாற்றும் மற்றொரு ஆசிரியை மட்டுமே பள்ளிக்கு வந்திருந்ததால், ஒட்டுமொத்தப் பள்ளி வளாகமும் முற்றிலும் வெறிச்சோடிக் காணப்பட்டது. பள்ளிக்கு வந்திருந்த அந்த ஆசிரியை வழக்கமான நேரத்திற்குப் பின்பு மாலையில் வீடு திரும்பினார்.
இதுகுறித்துத் தகவல் அறிந்ததும் பள்ளியின் தாளாளர் பவுல்ராஜ் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர் (BEO) பெனிஷ்கர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, நிலவி வரும் கூட்டுப் பிரச்சனை குறித்து நேரில் பார்வையிட்டுத் தீவிர விசாரணை நடத்தினர்.
இதுகுறித்துத் பெற்றோர்கள் கூறுகையில், “தலைமை ஆசிரியை ஸ்டெபி எமீமா பழிவாங்கும் நோக்கத்திலேயே வல்லநாடு பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த உத்தரவை நிர்வாகம் உடனடியாக ரத்து செய்ய வேண்டும். அவரை மீண்டும் இதே பள்ளியிலோ அல்லது சாத்தான்குளம் பகுதியில் உள்ள வேறு ஒரு பள்ளியிலோ பணியாற்ற அனுமதிக்க வேண்டும். இப்பிரச்சனையில் மாவட்டக் கல்வி அதிகாரிகள் உடனடியாக தலையிட்டுப் பொதுமக்களுக்கு உகந்த நிரந்தரத் தீர்வு காண வேண்டும்,” என்று தெரிவித்தனர்.


