மறக்க முடியாத நெல்லை கலெக்டர் மரு. சுகுமார் அவர்கள்!
நான் தொடுத்த தாமிரபரணி வழக்கு வேகமாக நடந்து கொண்டிருந்த வேளை. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு, 2024 நவம்பர் 10 அன்று, மாண்புமிகு நீதியரசர்கள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் புகழேந்தி ஆகியோர் ஆய்வு செய்ய வந்திருந்தனர். அந்தச் சமயத்தில் நெல்லை மாவட்ட ஆட்சியராக மரு. கார்த்திகேயன் அவர்களும், மாநகராட்சி கமிஷனராக (தற்போதைய விருதுநகர் மாவட்ட ஆட்சியர்) சுப. புத்ரா அவர்களும் இருந்தனர்.
நான் நீதியரசர்களைச் சந்திக்கச் சென்றபோது, “தாமிரபரணியைச் சுத்தம் செய்ய இவர் அரசுடன் இணைந்து பணியாற்றி வருகிறார்” என்று முத்தாலங்குறிச்சி காமராசுவாகிய என்னை மாவட்ட ஆட்சியர் அறிமுகப்படுத்தினார். அதைக் கேட்டு நீதியரசர்கள் சிரித்துக்கொண்டே, “அவர் தொடர்ந்து தொடுத்த வழக்குக்காகத்தான் நாங்கள் தாமிரபரணி நோக்கி வந்துள்ளோம். அப்படியென்றால் இந்த வழக்கு நியாயமானதுதானே!” என்று கேட்டனர். மாவட்ட ஆட்சியரும் அதை ஆமோதித்ததோடு, நீதியரசர்களின் ஆய்வுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தார். இந்த நாள் என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நாளாகும்.
தொடர்ந்து 2025-ல் நெல்லை புத்தகக் கண்காட்சிப் பணிகள் நடந்து கொண்டிருந்த சமயத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் மாற்றலாகிச் செல்கிறார். அவருக்குப் பிறகு நெல்லை கலெக்டராக மரு. சுகுமார் அய்யா அவர்கள் பொறுப்பேற்கிறார்கள். அவரை வரவேற்கச் சென்ற ராமையன்பட்டி பஞ்சாயத்துத் தலைவர் டேவிட், நான் எழுதிய ‘தவழ்ந்து வரும் தாமிரபரணி’ நூலை அவருக்குப் பரிசாகக் கொடுக்கிறார்.
அதன் பிறகு கலெக்டரை நான் நேரில் சந்தித்தேன். எங்கள் சந்திப்புகள் ஒவ்வொன்றும் எப்போதும் வித்தியாசமாகவே அமையும். ஒருமுறை பாளையங்கால்வாய் தூர்வாரும் பணியின் போது, ‘எக்ஸ்னோரா’ (Exnora) நிறுவனம் சார்பில் நான் கலந்துகொண்டேன். “தாங்கள் மேலப்பாளையத்திற்கு மேல் பகுதியில் இருந்து இப்பணியைத் துவங்க வேண்டும்” என்று கலெக்டரிடம் கோரிக்கை வைத்தேன். நான் சொன்னபடியே, மறுநாள் காலை 7 மணிக்கெல்லாம் அந்தப் பணி துவங்கியது.
அதுமட்டுமல்லாமல், “தருவையில் உள்ள பச்சையாறு கால்வாயைத் தாங்கள் நேரில் காண வேண்டும்” என்றேன். சொன்னபடியே அதிகாலையிலேயே தருவைக்கு வந்துவிட்டார். அதன் பிறகு, “திருநெல்வேலி கால்வாயைச் சுத்தப்படுத்த வேண்டும்” என்றோம்; அதையும் அவர் செய்துகொடுத்தார். அப்போதுதான் அங்கே என் நண்பரும் பத்திரிகையாளருமான பிச்சுமணி கலெக்டருக்கு அறிமுகமானார். அதன் பிறகு தருவை கிராமத்திற்குப் பல உதவிகளை மாவட்ட ஆட்சியர் செய்துகொடுத்தார்.
உடையார்பட்டி குளத்தைச் சுத்தப்படுத்தும் துவக்க விழாவிற்கு நான் சென்றிருந்தேன். அப்போது, “நகரத்திற்குள் கலக்கும் சாக்கடை நீரைச் சுத்திகரிக்க வேண்டும்; அந்தத் தண்ணீரைப் பாய்ச்சி மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும். அதைப் பராமரிக்கும் பொறுப்பை, நெல்லையிலிருந்து சென்னைக்குச் சென்று தொழில் செய்யும் தொழிலதிபர்கள் அடங்கிய ‘சென்னைவாழ் நெல்லை மக்கள் நலச்சங்கம்’ வசம் ஒப்படைக்க வேண்டும்” என அவரிடம் கோரிக்கை வைத்தோம். அதற்கும் அவர் சம்மதித்து, அதற்கான பணிகளைத் துரிதப்படுத்தினார். தொடர்ந்து பொருநை அருங்காட்சியகப் பணி, தாமிரபரணி சுத்தப்படுத்தும் பணி என நிறைய திட்டங்களைச் செயல்படுத்தினார். நான் அடிக்கடி என்னால் இயன்ற ஆலோசனைகளைக் கூறுவேன்; அதை அவர் இன்முகத்தோடு ஏற்றுக்கொள்வார்.
இன்று உடையார்பட்டி குளம் சுத்தப்படுத்தப்பட்டு கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிறது என்றால், அதற்கு நமது ஆட்சியர் மரு. சுகுமார் அவர்கள் எக்ஸ்னோரா நிறுவனம் மீது வைத்திருந்த நல்ல மதிப்பும், அந்த நிறுவனம் மாவட்ட ஆட்சியர் மீது வைத்திருந்த மரியாதையும்தான் மிக முக்கியக் காரணம்.
கடந்த வாரம் பாபநாசத்தில் அதிரடி ஆய்வு மேற்கொண்டு, ஆற்றில் துணிகளைக் கொட்டும் மக்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்தவர் நமது ஆட்சியர்தான். அதைத் தொடர்ந்து பல்வேறு கூட்டங்கள் நடைபெற்றன. விரைவில் தாமிரபரணிப் பணிகள் இன்னும் துரிதப்படுத்தப்படும் என ஆவலோடு எதிர்பார்த்திருந்தேன்.
அவர் பணியாற்றிய இந்த இரண்டு வருட காலத்திற்குள் நெல்லை புத்தகக் கண்காட்சி வந்தது. அதற்காக ‘பொருநை அருங்காட்சியகம் கடந்து வந்த பாதை’ என்ற புத்தகத்தை நான் வெளியிட்டேன். மேலும், பொருநை அருங்காட்சியகத் திறப்பு விழாவை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியரின் வாழ்த்துரையுடன் நான் எழுதிய ‘நெல்லை மாவட்ட வரலாறு’ புத்தகத்தையும் வெளியிட்டோம். அந்த நூலை அப்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களிடம் நேரடியாகக் கொடுத்து அறிமுகப்படுத்தி, என்னை பெருமைப்படுத்தினார் ஆட்சியர். அதுமட்டுமல்லாமல், அந்த நூலின் பெயரை மேடையிலேயே குறிப்பிட்டுப் பேசி என்னைக் கௌரவித்தார். இதையெல்லாம் என் வாழ்நாளில் என்னால் மறக்கவே முடியாது.
என்னை மட்டுமல்லாமல் நெல்லையிலுள்ள எழுத்தாளர்கள், பிரபலங்கள் எனப் பலரிடமும் மிகுந்த பற்றோடும் அன்போடும் செயல்பட்டு வந்தவர் கலெக்டர். அவர் நெல்லையில் பணியாற்றிய இந்த இரண்டு வருட காலம் ஒரு பொன்னான காலம். அவரின் பணிகள் நெல்லை மக்களால் என்றும் மறக்க முடியாத ஒன்றாகும். மிக்க நன்றி அய்யா! தாங்கள் செல்லும் இடமெல்லாம் தங்களின் புகழ் மேலும் பரவட்டும்.
தற்போது புதிதாகப் பொறுப்பேற்க வரும் ஆட்சியரும் நீர்நிலைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் என்று அறிந்தேன். அவரையும் நெஞ்சார அன்போடு வரவேற்போம். விரைவில் தாமிரபரணி முழுமையாகச் சுத்தமாகும் என்ற நம்பிக்கையோடு பயணிப்போம்.


