திருச்செந்தூர் கோயில் கடலில் நீராடியபோது ராட்சத அலையில் சிக்கி ஆழமான பகுதிக்கு இழுத்துச் செல்லப்பட்ட திருப்பூரைச் சேர்ந்த பெண்ணைக் கடற்கரை பாதுகாப்புப் பணியாளர்கள் துரிதமாகச் செயல்பட்டு பத்திரமாக மீட்டனர்.
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரது மனைவி சுகன்யா (30). இவர் தனது குடும்பத்தினருடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குச் சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) கடலில் நீராடிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஒரு பெரிய அலையில் சிக்கி கடலின் ஆழமான பகுதிக்கு இழுத்துச் செல்லப்பட்டார். கரையேற முடியாமல் அவர் கடலில் தத்தளித்ததைப் பார்த்த அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உடனடியாக இதுகுறித்து கடற்கரை பாதுகாப்புப் பணியாளர்களுக்குத் தகவல் தெரிவித்தனர். பாதுகாப்புப் பணியாளர் சிவராஜா தலைமையில் கார்த்திக், மகாராஜா, சுதாகர், சுதர்சன் மற்றும் சந்தோஷ் ஆகியோர் விரைந்து கடலில் குதித்தனர்.
சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு, ஆழமான பகுதியில் உயிருக்குத் தத்தளித்துக் கொண்டிருந்த சுகன்யாவை அவர்கள் பத்திரமாக மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனர். கரையில் முதலுதவி அளிக்கப்பட்ட பின், கோவில் ஆம்புலன்ஸ் மூலம் சுகன்யா உடனடியாக மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். தக்க சமயத்தில் உயிரைப் பணையம் வைத்துப் பெண்ணை மீட்ட பாதுகாப்புப் பணியாளர்களைப் பக்தர்களும் போலீசாரும் வெகுவாகப் பாராட்டினர்.


