பெங்களூரில் இருந்து ரயிலில் புகையிலை மற்றும் குட்கா பாக்கெட்டுகளைக் கடத்தி வந்த நபரை, கோவில்பட்டி ரயில் நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி இருப்புப் பாதை காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஸ்டீபன், ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் சங்கரபாண்டி மற்றும் போலீசார் இன்று காலை கோவில்பட்டி ரயில் நிலைய நடைமேடையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பெங்களூரு – மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் காலை 9 மணிக்கு கோவில்பட்டி ரயில் நிலையத்திற்கு வந்தது. அந்த ரயிலில் இருந்து ஒருவர் நான்கு பெரிய பைகளுடன் கீழே இறங்கினார். அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த போலீசார், அவரைத் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அந்தப் பைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 62 கிலோ புகையிலை மற்றும் குட்கா பாக்கெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த நபரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் கோவில்பட்டி வடக்கு திட்டங்குளம், வடக்குத் தெருவைச் சேர்ந்த சங்கையா என்பவரின் மகன் மாரிமுத்து (67) என்பது தெரியவந்தது.
அவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்த புகையிலை மற்றும் குட்கா பாக்கெட்டுகளைப் பறிமுதல் செய்தனர். கைதான மாரிமுத்து, ஏற்கனவே இதுபோன்று பெங்களூரில் இருந்து புகையிலை கடத்தி வந்தபோது இருமுறை கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.


