தூத்துக்குடியில் வீட்டிற்குள் புகுந்த 6 அடி நீள சாரைப்பாம்பை சிப்காட் தீயணைப்பு வீரர்கள் பத்திரமாகப் பிடித்தனர்.
தூத்துக்குடி அருகேயுள்ள மறவன்மடம் திரவியபுரம் 3-வது தெருவில் வசிப்பவர் தனசேகரன். இவரது வீட்டின் வரவேற்பு அறைக்குள் திடீரென பாம்பு ஒன்று புகுந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், உடனடியாக வீட்டை விட்டு வெளியேறி சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில், சிப்காட் தீயணைப்பு நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சோபாவின் அடியில் பதுங்கியிருந்த சுமார் 6 அடி நீளமுள்ள சாரைப்பாம்பை வீரர்கள் லாவகமாகப் பிடித்தனர். பிடிபட்ட பாம்பு பின்னர் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
பாம்பு பிடிபட்டதையடுத்து அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர். வீட்டின் உட்புறத்தையும், சுற்றுப்புறங்களையும் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும் எனத் தீயணைப்பு நிலைய அலுவலர் கார்த்திகேயன் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.


