தூத்துக்குடியில் த.வெ.க., தலைவர் விஜய் நடத்திய சாலை வலத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டனர்.
திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் மேற்கொள்வதற்காக விஜய் சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் நேற்று காலை தூத்துக்குடி விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு வேட்பாளர்கள் ஸ்ரீநாத் (தூத்துக்குடி), ஜே.கே.ஆர். முருகன் (திருச்செந்தூர்), பாலா (கோவில்பட்டி), ராஜ் பிரகாஷ் (தென்காசி) மற்றும் மாநில துணைப் பொதுச் செயலாளர் சுபத்ரா முருகன் ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
திருநெல்வேலியில் தனது பிரசாரத்தை முடித்துக்கொண்டு மாலை சுமார் 5 மணியளவில் தூத்துக்குடிக்கு வந்த விஜய், 3-ஆம் மைல் பகுதியிலிருந்து விவிடி சிக்னல் பகுதி வரை திறந்த வாகனத்தில் சாலை வலம் மேற்கொண்டார். வழிநெடுகிலும் திரண்டிருந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் விஜய் உற்சாகமாகக் கையசைத்தபடி சென்றார். பிரசாரத்தின் போது அவருக்கு வேல் பரிசளிக்கப்பட்டது. சாலை வலத்தை முடித்துக்கொண்டு அவர் சிதம்பரம் நகர் வழியாக மீண்டும் விமான நிலையம் சென்று சென்னைக்குப் புறப்பட்டார்.

இந்தச் சாலை வலத்தின் போது விஜய் வாகனத்தின் மேல் நின்றவாறு கைகூப்பியபடி சென்றாரே தவிர, எந்தப் பேச்சும் நிகழ்த்தவில்லை. இதனால் நீண்ட நேரம் காத்திருந்த தொண்டர்கள் சற்றே ஏமாற்றமடைந்தனர். இதற்கிடையே, பாத்திமா நகர் பகுதியைச் சேர்ந்த நர்சில்லின் என்ற பெண் தனது குழந்தைக்கு விஜய் மூலம் பெயர் சூட்ட வேண்டுமென்ற ஆசையுடன் வந்திருந்தார். கூட்ட நெரிசல் காரணமாக அவரது முயற்சி பலனளிக்கவில்லை. இது போன்று ஏராளமான பெண்கள் குழந்தைகளுடன் விஜய்யைக் காண்பதற்காகப் பல மணி நேரம் காத்திருந்தது குறிப்பிடத்தக்கது. விஜய்யின் வருகையையொட்டி தூத்துக்குடி மாநகரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


