எரிவாயு தட்டுப்பாடு குறித்து மத்திய அரசு உடனடியாக வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் வலியுறுத்தினார்
கோவில்பட்டியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: தமிழகத்தில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணிக்கு மக்கள் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாஜக ஆளும் மாநிலங்களில் ஜனநாயகம் குழிதோண்டிப் புதைக்கப்பட்டுள்ளது. தமிழக மக்கள் சாதி, மத மற்றும் பதற்ற அரசியலை ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் என்பதற்குத் திருப்பரங்குன்றம் ஒரு சாட்சியாகும். பாஜகவின் மக்கள் விரோத அரசியலுக்கு அதிமுகவும் துணையாகச் செயல்பட்டு வருகிறது.
எரிவாயு தட்டுப்பாட்டைச் சமாளிக்க இப்போதுதான் டெல்லியில் அவசரக் கூட்டத்தைக் கூட்டியுள்ளனர். போதிய கையிருப்பு இருந்தால் அதனை ஏன் மக்களுக்கு விநியோகிக்கவில்லை? இது குறித்து மத்திய அரசு உடனடியாக வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
அரசியலில் களம் கண்டுள்ள நடிகர் விஜய் குறித்துப் பேசுகையில், “அரசியல் கட்சித் தலைவராக அவரை மதிக்கிறோம். ஆனால், ஒரு கட்சிக்குத் தெளிவான லட்சியமும், கொள்கையும் அவசியம். இந்தியாவின் அடிப்படை கூறான மதச்சார்பின்மையைச் சிதைக்கும் பாஜகவைத் தோற்கடிக்க வேண்டும் என்பதை அவர் உணர்ந்ததாகத் தெரியவில்லை” என்று குறிப்பிட்டார்.
எங்கள் கூட்டணியில் கருத்துச் சொல்லும் ஜனநாயகம் உள்ளது. பாஜகவை வீழ்த்துவதில் திமுக மற்றும் இடதுசாரிகளைப் போலவே திருமாவளவனும் உறுதியாக உள்ளார். கம்யூனிஸ்ட் அரசியலை மக்கள் மதிக்கத் தொடங்கியுள்ளனர், எனவே எங்கள் வெற்றி உறுதி என்று அவர் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
மேலும், நாடாளுமன்றத்தில் விவாதங்கள் இன்றி சட்டங்கள் நிறைவேற்றப்படுவதையும், சிறுபான்மையினரைக் குறிவைத்துச் சட்டங்கள் உருவாக்கப்படுவதையும் அவர் கடுமையாகக் கண்டித்தார்.


