தூத்துக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தூத்துக்குடி மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு, நேற்று மர்ம நபர் ஒருவர் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். அதில், நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அது விரைவில் வெடிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்துத் தகவல் அறிந்ததும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மதன் உத்தரவின் பேரில், வெடிகுண்டு கண்டறியும் மற்றும் செயலிழக்கச் செய்யும் பிரிவு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் பிரிவினர் உடனடியாக நீதிமன்றத்திற்கு விரைந்தனர்.
நீதிமன்றத்தின் அனைத்து நுழைவு வாயில்கள், விசாரணை அறைகள், வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் வளாகத்தின் மூலை முடுக்குகளில் மெட்டல் டிடெக்டர் கருவிகள் மூலம் பல மணி நேரம் தீவிர சோதனை நடத்தப்பட்டது. சோதனையின் முடிவில் எவ்வித வெடிபொருட்களும் கண்டறியப்படவில்லை. இதன் மூலம் விடுக்கப்பட்ட மிரட்டல் வெறும் வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டது.
சமீபகாலமாகத் தூத்துக்குடியில் இது போன்ற போலி வெடிகுண்டு மிரட்டல்கள் அதிகரித்து வருவது பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பும் இதே போன்று நீதிமன்றத்திற்கு மிரட்டல் வந்தது. அதன் பிறகு மாவட்டத் தலைமைத் தபால் நிலையத்திற்கும் மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இந்தத் தொடர் சம்பவங்களில் மிரட்டல் விடுத்த மர்ம நபர்களைப் பிடிக்க, சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன் தூத்துக்குடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பொது அமைதியைக் குலைக்கும் வகையில் இத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.


