தூத்துக்குடியில் தேர்தல் பறக்கும் படைகள் நடத்திய சோதனையில் இதுவரை ரூ.9,81,298 மதிப்பிலான இலவசப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தலை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. கண்காணிப்புப் பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினர் மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இன்று (02.04.2026) வரை நடத்தப்பட்ட சோதனைகளில் கைப்பற்றப்பட்ட ரொக்கம் மற்றும் இதர பொருட்களின் விவரங்களை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான க.இளம்பகவத் வெளியிட்டுள்ளார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி: வாக்காளர்களுக்கு விநியோகிக்கக் கொண்டு செல்லப்பட்டதாகக் கருதப்படும் ரூ.9,81,298 மதிப்பிலான இலவசப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சட்டவிரோதமாகக் கடத்தப்பட்ட ரூ.4,02,837 மதிப்பிலான மதுபானங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட பணத்தில், விசாரணைக்குப் பின் முறையான ஆவணங்களைச் சமர்ப்பித்ததால் ரூ.59,73,780 ரொக்கத் தொகை உரியவர்களிடம் விடுவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ரூ.50,000-க்கு மேல் ரொக்கப்பணம் அல்லது ரூ.10,000-க்கு மேல் மதிப்புள்ள புதிய பொருட்களைக் கொண்டு செல்லும்போது, அதற்கான உரிய ஆவணங்களைக் கையில் வைத்திருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் மீண்டும் அறிவுறுத்தியுள்ளார். தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாகப் பொதுமக்கள் புகார் அளிக்கக் கட்டுப்பாட்டு அறை எண்களைத் தொடர்புகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


