தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கடற்கரையில் வனத்துறையினரால் பாதுகாக்கப்பட்ட 74 கடல் ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன.
தூத்துக்குடி வனக்கோட்டம் மற்றும் திருச்செந்தூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட கடற்கரை பகுதிகளில், ஆண்டுதோறும் டிசம்பர் முதல் மார்ச் மாதம் வரை அரிய வகை உயிரினமான பங்குனி ஆமைகள் முட்டையிட்டு குஞ்சு பொரிப்பது வழக்கம்.
ஆமை முட்டைகளை நாய், பறவைகள் மற்றும் மனிதர்களிடமிருந்து பாதுகாக்கும் பொருட்டு, வனத்துறையினர் மீனவ மக்களுடன் இணைந்து கடற்கரைப் பகுதிகளில் தொடர் ரோந்துப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு சேகரிக்கப்படும் முட்டைகளைப் பாதுகாத்துப் பராமரிக்க மணப்பாடு மற்றும் குலசேகரப்பட்டினம் ஆகிய பகுதிகளில் தற்காலிக ஆமைக்குஞ்சு பொரிப்பகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு மணப்பாடு மற்றும் குலசேகரப்பட்டினம் கடற்கரைப் பகுதிகளில் இருந்து சுமார் 1,068 கடல் ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு, பொரிப்பகங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. அதில் நேற்று முட்டைகளிலிருந்து வெளிவந்த 74 பங்குனி ஆமை குஞ்சுகளை, மாவட்ட வன அலுவலர் இளையராஜா அவர்களின் உத்தரவின்படி வனத்துறையினர் மணப்பாடு கடற்கரைப் பகுதியில் பாதுகாப்பாகக் கடலில் விட்டனர்.


