தூத்துக்குடியில் பாதாள சாக்கடை குழாய்களில் அடைப்பு தொடர்பாக கட்டணம் இல்லா தொலைபேசியில் புகாரினை பொதுமக்கள் பதிவு செய்யலாம் என்று மாநகராட்சி ஆணையர் சி.ப்ரியங்கா தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாநகராட்சி பத்திரிக்கை செய்தி தூத்துக்குடி மாநகராட்சியின் பெரும்பாலான பகுதிகளில் அமைந்துள்ள குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீரானது பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள பிரதான குழாய்கள் வழியாக துணை நீரேற்று நிலையம் மற்றும் பிரதான நீரேற்று நிலையம் மூலம் தருவைகுளம் பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சிக்கு சொந்தமான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் வந்தடையும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது.
இந்நிலையில் மாநகர பகுதிகளில் சில நேரங்களில் பாதாள சாக்கடை குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு அதன் காரணமாக இயந்திர குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறி சுகாதாரக் கேடு உருவாகும் நிலை ஏற்படுகிறது. இதனை உடனுக்குடன் முறைப்படுத்தி சரி செய்திட ஏதுவாக தூத்துக்குடி மாநகராட்சிக்கான கட்டணம் இல்லா தொலைபேசியில் (18002030401) தொடர்பு கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் மேற்காணும் தொலைபேசியில் தங்களது புகாரினை பதிவு செய்து முன்னுரிமை அடிப்படையில் பயன்பெறுமாறு மாநகராட்சி ஆணையர் சி.ப்ரியங்கா தெரிவித்துள்ளார்.


