கழுகுமலையில் மோட்டார் பைக்கில் ரேஷன் அரிசி கடத்திய வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை பகுதியில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி விற்கப்படுவதாக தனிபிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் நேற்று கழுகுமலை தனிபிரிவு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது கழுகுமலை வடக்கு தெரு பகுதியில் மோட்டார் சைக்கிளில் 2 மூட்டைகள் ஏற்றி வந்த நபரை நிறுத்தி சோதனை நடத்தினர். அந்த மூட்டைகளில் 100 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கழுகுமலை ஆறுமுகம்நகர் பகுதியை சேர்ந்த அய்யாபிள்ளை மகன் உதயசிங் (50). வியாபாரி. அவர் பொதுமக்களிடம் ரேசன் அரிசியை விலைக்கு வாங்கி பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு வெளியில் விற்று வந்ததுள்ளார். நேற்று ரேசன் அரிசியை கூடுதல் விலைக்கு விற்பதற்காக கடத்தி சென்றதும் தெரியவந்தது.
இதை தொடர்ந்து உதயசிங் மற்றும் அவரிடம் இருந்த ரேஷன் அரிசி மூட்டைகளையும், மோட்டார் பைக்கையும் போலீசார் பறிமுதல் செய்து, தூத்துக்குடி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மாடசாமி மற்றும் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து உதயசிங்கை கைது செய்தனர்.


