தங்கம் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஸ்வகர்மா நகை தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தூத்துக்குடியில் விஸ்வகர்மா நகை தொழிலாளர் சங்கத்தின் 48வது ஆண்டு விழா மற்றும் மகாசபை கூட்டம் சிவன் கோயில் தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவிற்கு தலைவர் முனியசாமி தலைமை தாங்கினார். கேஎஸ்பிஏ மகாராஜன் வரவேற்று பேசினார். சங்க வரவு செலவு கணக்குகளை பொருளாளர் செல்வகுமார் தாக்கல் செய்தார்.
தொடர்ந்து விஸ்வகர்மா மாணவ மாணவிகள் மேற்படிப்பு படிப்பதற்காக கல்வி உதவித் தொகையை ஆலோசகர் பலவேச கார்த்திகேயன் வழங்கினார். இக்கூட்டத்தில், தினமும் தங்க நகைகள் விலை ஏற்றத்தை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும். நகை தொழிலாளர்களை பாதுகாக்க அரசு மானியத்துடன் கடன் உதவி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை மற்றும் சர்க்கரை நோய், ரத்த அழுத்த பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனை அடிப்படையில் கண் கண்ணாடி வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் துணைச் செயலாளர் ஸ்ரீதர் வெங்கடேஷ், செயலாளர் மகாராஜன், முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


