தூத்துக்குடியில் எம்.சி.ஏ., பட்டதாரி இளைஞர் நடத்தி வரும் இரவு நேர நடமாடும் நூலகம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
தூத்துக்குடி நிகிலேசன் நகர் பகுதியை சேர்ந்தவர் சைமன் எம்.சி.ஏ., பட்டதாரி வாலிபரான இவர், தூத்துக்குடி துறைமுகத்தில் ஒப்பந்த பணியாளராக பணிபுரிந்து வருகிறார். சிறு வயது முதலே நூல்களைப் படிப்பதில் ஆர்வம் கொண்ட சைமன் தனது நண்பர்களுடன் சேர்ந்து பொதுமக்களிடம் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தவும் வெளியே அறியப்படாத இளம் எழுத்தாளர்களின் நூல்களை மற்றவர்கள் அறியும் படியும் அவர்கள் எழுதிய நூல்களை வாசிக்க வைப்பதற்காக நூலகம் ஒன்று அமைக்க எண்ணினார்.
ஆனால் அதற்கு மிகுந்த பொருட்செலவு ஆகும் என்பதால் தனது இருசக்கர வாகனத்தையே நடமாடும் நூலகமாக மாற்றி அமைத்துள்ளார். தினமும் வேலை முடிந்து மாலை வீடு திரும்பும் சைமன் தனது இருசக்கர வாகனத்தில் தனது இல்லத்தில் இருந்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை கொண்டு வந்து தூத்துக்குடி பாளையங்கோட்டை சாலையில் வ உ சி கல்லூரி அருகே இரவு தெருவிளக்கு வெளிச்சத்தில் தனது இருசக்கர வாகனத்தை நடமாடும் நூலகமாக அமைத்துள்ளார்.
இந்த நூலகத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி வாசிக்கக் கூடிய வகையில் கதைகள், கவிதை தொகுப்புகள், இளம் எழுத்தாளர்களின் புத்தகங்கள், பெரியார் ,அம்பேத்கர் போன்ற தலைவர்களின் புத்தகங்கள் அரசியல், ஆன்மீகம், அறிவு வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு பல்சுவை புத்தகங்களை தனது நூலகத்தில் அமைத்து பொதுமக்கள் பயன்பெற நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை வைத்துள்ளார்.
இரவு 8 மணி முதல் 10 மணி வரை செயல்படும் இந்த நடமாடும் நூலகத்தை போட்டி தேர்வுக்கு தேர்வு எழுதும் மாணவர்கள் குழந்தைகள் மற்றும் பல்வேறு தரப்பினர் பயன்படுத்தி வாசகர்களாக உருவாக்கியுள்ளனர். இந்த இரவு நேர நடமாடும் உலகம் தூத்துக்குடி மாநகர மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


