பொத்தகாலன்விளையில் உள்ள சடையனேரி கால்வாயில் வந்த தண்ணீரை கிராம மக்கள் மலர் தூவி இன்று வரவேற்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியில் போதிய மழையில்லாமல் குளங்கள் வறண்டு போனது. கிணறுகளிலும் தண்ணீர் அடி பாதாழத்துக்கு சென்றுள்ளது. இதனால் சாத்தான்குளம் பகுதியில் ஆழ்துளை கிணறுகள் மூலம் கிடைக்கும் தண்ணீரையும், சொட்டு நீர் பாசனம் அமைத்தும் விவசாயத்தை கவனித்து வருகின்றனர். மேலும் இப்பகுதி நீர் ஆதார குளமாக உள்ள புத்தன்தருவை, வைரவம்தருவை குளங்களுக்கும் தண்ணீர் திறந்து விட வலியுறுத்தியும் வருகின்றனர்.
மேலும் வெள்ளநீர் கால்வாய் திட்டப்பணிகளை விரைந்து முடித்து சாத்தான்குளம் பகுதிக்கு தண்ணீர் கொண்டு வர வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர். தற்போது மிக்ஜாம் புயலால் தாமிரவருணி ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டதையடுத்து வீணாக கடலுக்கு செல்லும் தண்ணீர் மருதூர் அணைக்கட்டு வழியாக சடையனேரி கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கால்வாயில் தண்ணீர் குறைவாக வருவதால் சாத்தான்குளம், உடன்குடி, பகுதிக்கு பிரித்து தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் சுப்பராயபுரம், முதலூர் ஊரணி வழியாக வந்து கொண்டிருக்கிறது.
சாத்தான்குளம் அருகே பொத்தகாலன்விளையில் சாஸ்தாவிநல்லூர் விவசாய நலச்சங்கம் மற்றும் ஊர் மக்கள் சேர்ந்து பணம் பிரித்து அங்குள்ள சடையனேரி கால்வாயை சீரமைத்திருந்தனர். இந்நிலையில் நேற்று சடையனேரி கால்வாயில் பொத்தகாலன்விளை கால்வாய் பகுதியில் புதன்கிழமை தண்ணீர் வந்தடைந்து வைரவம்தருவைகுளத்துக்கு செல்கிறது.
இந்நிலையில் பொத்தகாலன்விளை கால்வாயில் வந்த தண்ணீரை, சாஸ்தாவிநல்லூர் விவசாயிகள் நலச்சங்க செயலர் லூர்துமணி தலைமையில் விவசாய சங்க செயற்குழு உறுப்பினர்கள் ஜெயக்குமார், சித்திரை, அலெக்ஸ், டோமினிக், மற்றும் கிராம மக்கள் சுவாமிநாதன், செல்வ ஜெகன், பாபு, பாண்டி, ராஜன், ஜோசப், பிரகாஷ், சீமான், வெங்கடேஷ்,வினோத்,கிருஷ்ணன் ஆகியோர் மலர் தூவி வரவேற்றனர்.
சடையனேரி கால்வாயில் வைரவம்தருவை, புத்தன்தருவை குளங்களில் நிரம்பும் வரை தண்ணீர் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


