பத்மஸ்ரீ முனைவர் நெ. து. சுந்தரவடிவேலு (நெய்யாடுபாக்கம் துரைசாமி சுந்தரவடிவேலு, Nayyadupakkam Duraiswamy Sundaravadivelu, அக்டோபர் 12, 1912 – ஏப்ரல் 12, 1993) தமிழ்நாட்டில் சென்னைப் பல்கலைக்கழகத்தின், துணைவேந்தராக இரு முறை (1969 முதல் 1972 வரையும் 1973 முதல் 1975 வரையும்) பொறுப்பு வகித்தவர். அதற்கு முன்பு தமிழ் நாடு அரசின் கல்வி ஆலோசகராகவும், பொதுக்கல்வி இயக்குநராகவும் பல காலம் சிறப்பாகப் பணியாற்றினார்.இவரது பெற்றோர் துரைசாமி முதலியார், சாரதாம்பாள் தம்பதியினர்.
பொதுக்கல்வி இயக்குநர்
1954 ஆம் ஆண்டு, சுந்தரவடிவேலு பொதுக்கல்வி இயக்குநராகப் பதவி ஏற்றார். அப்போது தமிழக முதல்வராக இருந்த காமராசருடன் இணைந்து பல திட்டங்களைச் செயல்படுத்தினார். இவற்றுள் முன்னுரிமை வகிப்பது இலவசக்கல்வி மற்றும் இலவசச் சீருடைத்திட்டங்கள் ஆகியவை ஆகும்.
இலவச மதிய உணவுத் திட்டம்
இவர் காலத்தில் இலவச மதிய உணவுத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. பள்ளிக் குழந்தைகள் புத்தக மூட்டைகளோடு மதிய உணவுக் கட்டுச்சோற்று மூட்டைகளையும் சுமந்து சென்று கொண்டு இருந்த நிலைமை மாறியது. இலவச மதிய உணவுத் திட்டம் மூலம் மாணவர்கள் சாப்பிட்டது மட்டுமில்லாமல், இலவசக் கல்வியும் கற்றனர்.
1940யில் தனது திருமணத்தின் பொழுது நெ. து. சுந்திரவடிவேலு
ஓராசிரியர் பள்ளிகள்
எல்லா ஊர்களிலும் தொடக்கப் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. பின்தங்கிய பல குடும்பங்களிலிருந்து மாணவர்கள் கல்வி கற்றார்கள். தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வி பெருகியது. ஆயிரக்கணக்கான பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்தப் பள்ளிகளுக்கு ஆசிரியர்களை எப்படிப் பணியமர்த்துவது என்ற கேள்வி எழுந்தது. இதற்கு அந்நாள் முதலமைச்சரும் பொதுக்கல்வி இயக்குனரும் எடுத்த முடிவு, தமிழ்நாட்டிலே படித்துவிட்டு வேலை கிடைக்காமல் துயருற்ற பலருக்கும் வேலை கிடைக்கச் செய்தது எனலாம். ஆயிரக்கணக்கானோர் ஓராசிரியர் பள்ளிகளுக்கு ஆசிரியர்களாகப் பணியமர்த்தப்பட்டனர்.
பொது நூலக இயக்குநர் (பொறுப்பு)
சுந்தரவடிவேலு, 1954 ஆம் ஆண்டு பொதுக்கல்வி இயக்குநராகப் பதவியேற்றபோது பொது நூலக இயக்குநராகவும் பொறுப்பு ஏற்றார். நூலகத்தின் தேவையை உணர்ந்த இவர் தமிழ்நாடு முழுவதும் 400-க்கும் மேலான கிளை நூலகங்களை ஏற்படுத்தினார்.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்
சுந்தரவடிவேலு பள்ளிக் கல்வியில் திறம்படப் பணிபுரிந்ததைப் போலவே சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் செயல்பட்டார். பள்ளிப்படிப்புடன் நிறுத்திவிட்டுக் கல்லூரிப் படிப்பைத் தொடர முடியாமல் வேலைக்குச் செல்வோர் உயர்கல்வி பெறுவதற்காகக் கல்லூரிகளில் மாலை நேரக் கல்லூரிகளை அறிமுகப்படுத்தினார். கல்லூரி ஆசிரியர்களுக்கு மறுபயிற்சி எனப்படும் படிப்பைக் கொண்டு வந்தார்.
தமிழ் எழுத்தாளர்
சுந்தரவடிவேலு பெரியவர்களுக்காக 30 நூல்களை எழுதியுள்ளார். சிறுவர்களுக்காக 13 நூல்களை வள்ளுவர் வரிசை என்னும் தலைப்பில் எழுதி உள்ளார். பெரியார் பற்றிய அரிய நூலொன்றையும் எழுதி வெளியிட்டுள்ளார். இவருடைய வாழ்க்கை வரலாற்றை மூன்று தொகுதிகளாக எழுதி வெளியிட்டுள்ளார்.
எழுதியுள்ள நூல்கள்
தமிழ்
அடித்தா? அணைத்தா? நெ.து. சுந்தரவடிவேலு வெளியீடு, சென்னை. 1958; இலவசப் பதிப்பு.
முதியோர் கல்வி முதல்நூல்; முதியோர் கல்வி இயக்ககம், சென்னை
பூவும் கனியும், கலைக்கதிர் வெளியீடு, கோவை. முதற்பதிப்பு 26.1.1958, இரண்டாம் பதிப்பு 27.5.1959
வள்ளுவன் வரிசை 1 : தம்பி நில், முருகன் அண்ட் கம்பெனி, சென்னை. 1959
வள்ளுவன் வரிசை 2 : நஞ்சுண்டவர், முருகன் அண்ட் கம்பெனி, சென்னை. 1959
வள்ளுவன் வரிசை 3 : சிலுவையில் மாண்டவர், முருகன் அண்ட் கம்பெனி, சென்னை. 1959
வள்ளுவன் வரிசை 4 : குண்டுக்கு இரையானவர், முருகன் அண்ட் கம்பெனி, சென்னை. 1959
வள்ளுவன் வரிசை 5 : மின்விளக்கு, முருகன் அண்ட் கம்பெனி, சென்னை. 1959
வள்ளுவன் வரிசை 6 : தங்கத் தாத்தா, முருகன் அண்ட் கம்பெனி, சென்னை. 1959
வள்ளுவன் வரிசை 7 : தோற்றும் வென்றவர், முருகன் அண்ட் கம்பெனி, சென்னை. 1959
வள்ளுவன் வரிசை 8 : வானொலி வழங்கியவர், முருகன் அண்ட் கம்பெனி, சென்னை. 1959
வள்ளுவன் வரிசை 9 : பாக்குவெட்டி, முருகன் அண்ட் கம்பெனி, சென்னை. 1959
வள்ளுவன் வரிசை 10: ஆறு, முருகன் அண்ட் கம்பெனி, சென்னை. 1959
வள்ளுவன் வரிசை 11: விளக்குப்பாவை, முருகன் அண்ட் கம்பெனி, சென்னை. 1959
வள்ளுவன் வரிசை 12: செஞ்சிலுவை தந்தவர், முருகன் அண்ட் கம்பெனி, சென்னை. 1959
வள்ளுவன் வரிசை 13: ரேடியனம் கண்டவர், முருகன் அண்ட் கம்பெனி, சென்னை. 1959
உதிரிப்பூ, கலைக்கதிர் வெளியீடு, கோவை; 1960
எண்ண அலைகள். முருகன் – கம்பெனி, சென்னை.
வையம் வாழ்க, நெ.து. சுந்தரவடிவேலு வெளியீடு, சென்னை., 1962, இலவச பதிப்பு
சுதந்திரம் காப்போம், முருகன் அண்ட் கம்பெனி, சென்னை. மு.பதி. மே 1965
அங்கும் இங்கும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.சென்னை. மு.பதி. சூன் 1968, இ.பதி.திச 1968, மூ.பதி.சூலை 1973, நா.பதி. ஆக 1982
சிந்தனை மலர்கள், கலைக்கதிர் வெளியீடு, கோவை 1968
எல்லோரும் வாழ்வோம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்,சென்னை. 1970
நான் கண்ட சோவியத் ஒன்றியம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்,சென்னை. மு.பதி. அக் 1971
உலகத் தமிழ், தமிழ் எழுத்தாளர் கூட்டுறவு சங்கம், சென்னை. மு.பதி. சன 1972, இ.பதி.சூன் 1975, மூ.பதி. சூலை 1977
சோவியத் மக்களோடு. வானதி பதிப்பகம் சென்னை. மு.பதி. அக் 1973
வள்ளுவர் வாய்மொழி. வானதி பதிப்பகம். மு.பதி. அக் 1973, இ.பதி. சன 1977
மேதை மேகநாதன், வானதி பதிப்பகம், சென்னை. 1974
புதிய ஜெர்மனியில் வானதி பதிப்பகம், சென்னை 1974
பிரிட்டனில், வானதி பதிப்பகம், சென்னை 1975
தலைவருள் மாணிக்கம், தமிழ் நூல்நிலையம், சென்னை. 1975
சோவியத் கல்விமுறை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்,சென்னை. மு.பதி திச 1977
வாழ்விக்க வந்த பாரதி,வானதி பதிப்பகம், சென்னை. மு.பதி. செப் 1978
ஊருக்கு நல்லது, சுந்தரவடிவேலு, வானதி பதிப்பகம், சென்னை.
நஞ்சு உண்டவர். கஸ்தூர்பா காந்தி கன்யா குருகுலம். 1979
புரட்சியாளர் பெரியார், எஸ். சந்த் அண்ட் கோ, சென்னை 1979
பெரியாரும் சமதர்மமும், புதுவாழ்வு பதிப்பகம்
இலக்கியம் கொழிக்கும் சோவியத் ஒன்றியம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
பயன்மிகு பத்தாண்டுகள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
நினைவில் நிற்பவர்கள். வானதி பதிப்பகம். 1982
கல்வி வள்ளல் காமராசர், எமரால்ட் பப்ளிகேஷன்ஸ், சென்னை. 1982
நினைவு அலைகள் – மூன்று பாகங்கள், வானதி பதிப்பகம் 1983
லெனின் வாழ்கிறார் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ். 2009
பெரியாரும் சமதர்மமும்
சிங்காரவேலரும் பகுத்தறிவும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
பள்ளிச் சிறுவர்களுக்கு பயனுள்ள யோசனைகள், தாமரை 1992
தியாகச் செம்மல் நால்வர், தாமரை,1992
இந்திய சோவியத் தோழமை, இந்திய சோவியத் கலாச்சாரக் கழகம், சென்னை
எல்லோரும் படிப்போம், தாகூர் கல்வி நிலையம்
துலா முழுக்கு
சுந்தர வடிவேலனாரின் மந்திர மணி மொழிகள்: ஆண்டு விழா 20-1-1961. அரசினர் ஆதாரப் பயிற்சிப் பள்ளி மாணவ-ஆசிரியர் சங்கம். 1961
ஆங்கிலம்
Harnessing Community Effort for Education: A New Experiment in Madras, Director of Public Instruction, Madras., 1962
சிறப்புகள்
இந்திய குடியரசு 1961 ஆம் ஆண்டு இவருக்கு பத்மஸ்ரீ[9] விருது வழங்கியது.
சுந்தரவடிவேலு நினைவாக உத்தரமேரூர் ஒன்றியம், நெய்யாடுபாக்கத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிக்கு நெ. து. சுந்தரவடிவேலு அரசு உயர்நிலைப் பள்ளி என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
சென்னை மாநிலக்கல்லூரியில், நல்லாசிரியர் நமச்சிவாயரது மாணவர் இவர்.


