ஜே. ஆர். டி. டாட்டா எனப் பரவலாக அறியப்படும் ஜெஹாங்கிர் ரத்தன்ஜி தாதாபாய் டாட்டா (சூலை 29, 1904 – நவம்பர் 29, 1993) இந்தியாவின் முதன்மையான தொழிலதிபர்களுள் ஒருவர் ஆவார். இவர் இந்திய வானூர்திப் போக்குவரத்தின் முன்னோடியாகக் கூறப்படுகிறார். மேலும், இவர் இந்திய விமானியும், தொழிலதிபரும், தொழில் முனைவோரும், டாட்டா குழுமத்தின் தலைவரும் ஆவார்.
இந்தியாவின் டாட்டா குடும்பத்தில் பிறந்த இவர், பிரபல தொழிலதிபர் இரத்தன்ஜி தாதாபாய் டாட்டா, அவரது மனைவி சுசான் பிரையர் ஆகியோரின் மகனாவார். இவர் பிரான்சு நாட்டின் பாரிசு நகரத்தில் பிறந்தார். இவரது தாயார் பிரான்சு நாட்டைச் சேர்ந்தவர் ஆதலால் இவர் தனது சிறுவயதில் பிரான்சிலேயே வாழ்ந்தார். இவரது தாயார் இந்தியாவில் கார் ஓட்டிய முதல் பெண்மணி ஆவார்.1929இல் இவர் இந்தியாவின் முதல் வானூர்தி ஓட்டுனர் உரிமம் பெற்றார்.
டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ், டாட்டா மோட்டார்ஸ், டைட்டன் நிறுவனம், டாட்டா உப்பு, வோல்டாஸ், ஏர் இந்தியா உள்ளிட்ட டாட்டா குழுமத்தின் கீழ் பல தொழில்களை நிறுவியதற்காக இவர் மிகவும் பிரபலமானவர். 1983ஆம் ஆண்டில், இவருக்கு செவாலியே விருதும், 1955 மற்றும் 1992ஆம் ஆண்டுகளில், இந்தியாவின் உயரிய குடிமகன்களின் விருதுகளான பத்ம விபூசண், பாரத ரத்னா ஆகிய இரண்டு விருதுகளைப் பெற்றார். இந்திய தொழில்துறைக்கு இவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காக இந்த விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன.


