வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளில், அடையாள அட்டை வைத்திருக்கும் முகவர்கள் மட்டுமே மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என கோவில்பட்டி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், சார் ஆட்சியருமான ஹிமான்ஷு மங்கள் அறிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில், தேர்தல் வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கோவில்பட்டி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், சார் ஆட்சியருமான ஹிமான்ஷு மங்கள் இக்கூட்டத்திற்குத் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் அவர் தெரிவித்ததாவது: “கோவில்பட்டி தொகுதியில் பதிவாகி, சார் ஆட்சியர் அலுவலக பாதுகாப்பு அறையில் (Strong Room) வைக்கப்பட்டுள்ள தபால் வாக்குகள் அனைத்தும், வரும் மே 4-ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் பலத்த பாதுகாப்புடன் தூத்துக்குடியில் உள்ள வ.உ.சி. பொறியியல் கல்லூரிக்கு எடுத்துச் செல்லப்படும். அங்குதான் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த இடமாற்ற நிகழ்வைப் பார்வையிட வேட்பாளர்களின் முகவர்கள் உரிய நேரத்தில் வர வேண்டும்.
தொடர்ந்து, வாக்கு எண்ணும் மையத்தில் பணியாற்ற உள்ள முகவர்கள் குறித்துப் பின்வரும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன: வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்களாகச் செயல்பட உள்ளவர்களின் விவரங்கள் அடங்கிய படிவங்களை, வரும் மே 1-ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்து தேர்தல் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். உரிய காலத்தில் படிவங்களை வழங்குபவர்களுக்கு மட்டுமே அடையாள அட்டைகள் வழங்கப்படும்.
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளில், அடையாள அட்டை வைத்திருக்கும் முகவர்கள் மட்டுமே மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வட்டாட்சியர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


