
தூத்துக்குடியில் மாநில தரவரிசையில் முன்னணி இடங்களைப் பிடித்த நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்களுக்கும், காயகல்ப விருதிற்கு தகுதிபெற்ற அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், புத்தகங்கள் வழங்கி கௌரவித்தார்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று(23.04.2025), பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் மாவட்ட சுகாதார நலச்சங்கக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டி சுகாதார மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணித் தாய்மார்கள், குழந்தைகள் மற்றும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சைகளை மேலும் மேம்படுத்துவது குறித்து மருத்துவ அலுவலர்களுக்கு அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.
மேலும், தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறையின் கீழ் தமிழகத்தில் இயங்கிவரும் 316 அரசு நகர்புற சுகாதார நிலையங்களில் வழங்கப்படும் கர்ப்பிணித் தாய்மார்கள் பதிவு, பிரசவங்களின் எண்ணிக்கை, மகப்பேறு மற்றும் குழந்தைகளுக்கான சேவைகள், ஆய்வகங்களில் நடத்தப்படும் பரிசோதனைகளின் எண்ணிக்கை, உள் மற்றும் வெளிநோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் போன்ற காரணிகளை அடிப்படையாகக் கொண்டு சேவைகளுக்கான மார்ச் மாத மாநில தரவரிசைப் பட்டியிலின்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிக்குட்பட்ட பாத்திமா நகர் நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முதல் இடத்தையும், கணேஷ் நகர் நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இரண்டாம் இடத்தையும், முள்ளக்காடு நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் நான்காம் இடத்தையும், தருவைரோடு நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஐந்தாம் இடத்தையும், மடத்தூர் நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆறாம் இடத்தையும் பெற்றுள்ளன. மேலும், படுக்கப்பத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் கோவில்பட்டி சுகாதார மாவட்டத்திற்குட்பட்ட ஸ்ரீராம் நகர் நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் “காயகல்ப விருதிற்கு” தகுதிபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களின் வழிகாட்டுதலின் படியும், மாவட்ட சுகாதார அலுவலர் தூத்துக்குடி, கோவில்பட்டி மற்றும் மாநகர நல அலுவலர் ஆகியோரின் அறிவுரையின் படியும் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் மருத்துவ சேவையில் சிறப்பாக செயல்பட்டதைத் தொடர்ந்து, மாநில அளவிலான தரவரிசைகளில் மேற்கண்ட அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் முன்னணி இடங்கள் பெற்றுள்ளது.
அந்தவகையில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் இன்று நடைபெற்ற மாவட்ட சுகாதார நலச்சங்கக் கூட்டத்தில், மாநில தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தைப் பெற்ற மாநகராட்சிப் பகுதிக்குட்பட்ட பாத்திமா நகர் நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் தினேஷ், இரண்டாம் இடத்தைப் பெற்ற கணேஷ் நகர் நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் காவியா, நான்காம் இடத்தைப் பெற்ற முள்ளக்காடு நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் சூர்யபிரகாஷ்,
ஐந்தாம் இடத்தைப் பெற்ற தருவைரோடு நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் அஸ்வின், ஆறாம் இடத்தைப் பெற்ற மடத்தூர் நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் ஜல்சி ஆகியோருக்கும், காயகல்ப விருதிற்கு தகுதிபெற்றுள்ள படுக்கப்பத்து அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் லெட்சுமி மற்றும் கோவில்பட்டி சுகாதார மாவட்டத்திற்குட்பட்ட ஸ்ரீராம் நகர் நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் பாசில் உசேன் ஆகியோருக்கும் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், புத்தகங்கள் வழங்கி கௌரவித்து, மேலும் மருத்துவப் பணிகளில் சிறப்பாக செயல்பட வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட சுகாதார அலுவலர்கள் யாழினி (தூத்துக்குடி), வித்யா (கோவில்பட்டி), துணை இயக்குநர்கள் யமுனா (தொழுநோய்), சுந்தரலிங்கம் (காசநோய்), மாநகர நல அலுவலர் சரோஜா மற்றும் மருத்துவ அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.