தூத்துக்குடி மார்க்கெட் அருகில் தேவர் புரம் பிரதான சாலையில் ஆக்கிரப்பை அகற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநகர செயலாளர் முத்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடியில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் சாலையாக தமிழ் சாலையும் வி. இ சாலையும் உள்ளது. பழைய பேருந்து நிலையம் முதல் பைபாஸ் வரை இருவழிப்பாதையாகவும் அது போல் பழைய துறைமுகம் வரை பாதையாகவும் தமிழ்ச் சாலை உள்ளது. வி.இ சாலையானது பழைய போஸ்ட் ஆபீஸ் முதல் அம்பேத்கார் சிலை வரை ஒரு வழிப் பாதையாக உள்ளது.
பால விநாயகர் கோவில் தெருவில் இருந்து வரும் வாகனங்களும் வி. இ ரோடு வழியாக அம்பேத்கார் சிலை வரை சென்று தமிழ் சாலையிலும் திருச்செந்தூர் சாலையும் பயன்படுத்துகின்றன. இதனால் ஜெயம் ஸ்டோர் முதல் அம்பேத்கார் சிலை வரை போக்குவரத்து நெருக்கடி உள்ள பகுதியாகும். பள்ளிகளும் கல்லூரிகளும் உள்ளதால் மாணவர்கள் அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
மேலும் மார்க்கெட் உள்ளது. மக்கள் நெருக்கடி அதிகம் உள்ள சாலையாக இது உள்ளது. இச்சாலையில் மக்கள் நடந்து செல்ல முடியாமல் சாலையில் ஆக்கிரப்பு இருபுறமும் உள்ளது. சாலை அதன் இயல்பு அகலத்தை விட வெகுவாக சுருங்கிவட்டது. இச்சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படும் நிலை உள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சி நிர்வாகம் இவ்விஷயத்தில் தலையிட்டு ஜெயம் ஸ்டோர் சந்திப்பில் இருந்து அம்பேத்கர் சிலை வரை சாலையில் இருபுறமும் உள்ள ஆக்கிரப்புகளை அகற்றி பொதுமக்கள், வியாபரிகள் மற்றும் மாணவர்கள் பயமின்றி செல்ல ஆவண செய்யுமாறு தூத்துக்குடி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநகரக்குழு சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


