தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் சுமார் 136.35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அதிநவீன உயர் சிறப்பு மருத்துவமனை கட்டிடத்தைத் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் ஆ.ஸ்ரீநாத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரத் தென்மாவட்ட ஏழை எளிய பொதுமக்களுக்கு உலகத்தரம் வாய்ந்த உயர்தர மருத்துவச் சிகிச்சைகள் இலவசமாகக் கிடைக்கப் பெற வேண்டும் என்ற நோக்கில், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் புதிய மல்டி ஸ்பெஷாலிட்டி கட்டிடப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. தற்போது சுமார் 136.35 கோடி ரூபாய் பெரும் மதிப்பீட்டில் இந்த அதிநவீன உயர் சிறப்பு மருத்துவமனைக் கட்டிட உள்கட்டமைப்புப் பணிகள் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
இப்புதிய மருத்துவக் கட்டிடத்தில் மருத்துவ உபகரணங்கள் பொருத்தும் பணிகள் மற்றும் மக்கள் பயன்பாட்டிற்குத் திறப்பதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் குறித்துத் தூத்துக்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆ.ஸ்ரீநாத் நேற்று (மே 19) நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் அவர் மருத்துவமனையின் பல்வேறு வார்டுகள், அறுவை சிகிச்சை அரங்குகள் உள்கட்டமைப்பு வசதிகள், குடிநீர் மற்றும் மின்சார விநியோகக் கட்டமைப்பு ஆகியவற்றை அவர் தளம் வாரியாகச் சென்று பார்வையிட்டார். ஆய்வின் போது, மருத்துவக் கல்லூரி டீன், மூத்த மருத்துவர்கள், பொதுப்பணித்துறை அலுவலர்கள் மற்றும் தவெக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.


