தூத்துக்குடி மாநகராட்சி வணிக வளாகம் மற்றும் அண்ணா பேருந்து நிலையத்தில் கனிமொழி எம்பி திடீர் ஆய்வு ஆய்வுகளை மேற்கொண்டார்.
தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி இன்று தூத்துக்குடி சிதம்பரநகரில் அமைந்துள்ள மாநகராட்சி வணிக வளாகம் மற்றும் அண்ணா பேருந்து நிலைய வணிக வளாகம் ஆகிய இடங்களுக்கு நேரில் சென்று, அங்குள்ள வணிகக் கடைகளின் தற்போதைய நிலை, பொதுமக்களுக்கான குடிநீர், சுகாதாரம், வாகனக் காப்பகம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, அங்குள்ள சிறு வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் கோரிக்கைகளைக் கேட்டறிந்த அவர், அண்ணா பேருந்து நிலைய வணிக வளாகப் பகுதிகளைப் புனரமைத்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ஏதுவாக மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநகராட்சி அதிகாரிகளுக்குத் திட்டவட்டமாக அறிவுறுத்தினார்.
ஆய்வுப் பணிகளை நிறைவு செய்த பின்னர், தூத்துக்குடி அபிநயா மஹாலில் நடைபெற்ற, மாவட்ட தி.மு.க. பிரதிநிதி பொன்ராஜ் இல்லத் திருமண விழாவில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்நிகழ்வுகளின் போது, திமுக மாவட்ட செயலாளர் கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.


