‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின்கீழ் டிச.18, 19ல் விளாத்திகுளம் வட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் க.இளம்பகவத் ஆய்வு செய்ய உள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மக்களை நாடி, மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வந்து செயலாற்றும் வகையில் அறிவித்துள்ள ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின்கீழ் மாவட்ட ஆட்சித் தலைவர் மாவட்ட அளவிலான அலுவலர்களுடன் விளாத்திகுளம் வட்டத்தில் 18.12.2024 அன்று தங்கி முகாமிட்டு விளாத்திகுளம் வட்டத்திலுள்ள அனைத்துத்துறை அலுவலகங்கள் மற்றும் அரசின் திட்டங்கள் குறித்து கள ஆய்வு செய்ய உள்ளார்கள்.
அன்றைய தினம் மதியம் 2.30 முதல் 4.30 வரை அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வு நடத்தி முற்பகலில் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட கள பயணங்கள் / அலுவலக ஆய்வுகள் குறித்து கேட்டறிவார்கள். அதன்பின் மாவட்ட ஆட்சித் தலைவர் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாலை 04.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை பெற்றுக் கொள்வார்.
மீண்டும் நகர்ப்புறம் / கிராம ஊராட்சிகள் பகுதிகளுக்குச் சென்று பல்வேறு அரசு துறைகளின் சேவை வழங்குதல் / திட்ட செயல்பாடுகள் குறித்து மதிப்பாய்வு செய்ய உள்ளார்கள். அன்றைய இரவு அவ்வட்டத்திலேயே மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் அனைத்து அலுவலர்களும் தங்கி மறுநாளான 19.12.2024 அன்று அதிகாலை அடிப்படை வசதிகளான குடிநீர் / சுகாதாரம் / தூய்மை / போக்குவரத்து / முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் போன்றவற்றை ஆய்வு செய்ய உள்ளனர்.
மக்கள் இருப்பிடம் தேடி சேவை அளிக்கும் வகையிலும் களஆய்வின் போது கண்டறியப்பட்ட அவ்வட்ட மக்களின் தேவைகள் குறித்த முன்மொழிவுகளை அரசுக்கு அனுப்பி வைத்திடும் வகையிலும் உருவாக்கம் செய்யப்பட்டுள்ள ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்ட முகாமின் போது பொதுமக்கள், தங்கள் வாழ்விட முன்னேற்றத்திற்கு தேவையான கருத்துக்களையும், கோரிக்கை மனுக்களையும் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் வழங்கிடலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.


