எட்டயபுரம் அருகே சோழபுரம் பத்திரகாளி அம்மன் கோவில் விழாவில் உடலில் சேற்றை பூசி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே சோழபுரம் பத்திரகாளி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 13-ந்தேதி தொடங்கியது. அன்றைய தினம் பக்தர்கள் 108 இளநீர் மற்றும் 210 பால்குடங்களுடன் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு 9 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
விழா நாட்களில் தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. விழாவின் சிகர நாளான நேற்று முன்தினம் காலையில் விரதம் இருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக ஊர் பொது கண்மாய்க்கு சென்று தங்களது உடலில் சேறு பூசிக்கொண்டனர்.
தொடர்ந்து அவர்கள் கைகளில் வேப்பிலையை ஏந்தியவாறு முக்கிய வீதிகளின் வழியாக மேளதாளம் முழங்க ஆடிப்பாடியவாறு சென்று கோவிலை வந்தடைந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
உடலில் சேறு பூசி நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுவதால் இயற்கை சீற்றம் தணியும், வேளாண்மை செழிக்கும், நோய்கள் நெருங்காது என்று பக்தர்கள் தெரிவித்தனர். விழாவின் நிறைவு நாளான நேற்று மதியம் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.


