தூத்துக்குடி குரூஸ்புரம் பகுதியில் அமைந்துள்ள முக்கியச் சந்திப்பில், போக்குவரத்திற்கு இடையூறாகக் கட்டப்பட்டுள்ள தனியார் பள்ளி விளம்பரப் பலகையால் விபத்து ஏற்படும் அபாயம் நிலவுவதாகப் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி குரூஸ்புரம் பக்கிள் ஓடை 5 வழிச்சாலை சந்திப்பில் மாநகராட்சி சார்பில் உயர் கோபுர மின்விளக்கு தூண் அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தூணில், தனியார் பள்ளி மாணவர் சேர்க்கைக்கான விளம்பரப் பலகை ஒன்று அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளது. இந்தப் பலகை சாலையை நோக்கி நீட்டிக்கொண்டு இருப்பதால், அந்த வழியே செல்லும் வாகனங்கள் அதன் மீது மோதாமல் இருக்க விலகிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
முக்கியச் சந்திப்பு என்பதால் எப்போதும் வாகன நடமாட்டம் மிகுந்த இப்பகுதியில், விளம்பரப் பலகையைத் தவிர்க்க வாகனங்கள் திடீரெனத் திரும்புவதால் பின்னால் வரும் வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக இப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். தனியார் பள்ளியின் இந்த அத்துமீறிய செயலால் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
சாலைப் பகுதியில் விபத்து ஏற்படுவதற்கு முன்பாக, மாநகராட்சி நிர்வாகம் தலையிட்டு அந்த விளம்பரப் பலகையை உடனடியாக அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயல்பட்ட பள்ளி நிர்வாகம் மீது வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற விதிமீறல்கள் நடக்காமல் இருக்கக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


