தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர்களுக்குத் தகவல் சீட்டு வழங்கும் பணி நேற்று முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, மாவட்டத்தில் உள்ள மொத்தம் 13,88,186 வாக்காளர்களுக்கும் வரும் ஏப்ரல் 18-ஆம் தேதிக்குள் இந்தத் தகவல் சீட்டுகளை விநியோகம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனுடன் வாக்காளர் கையேடும் சேர்த்து வழங்கப்பட்டு வருகிறது.
இந்தத் தகவல் சீட்டின் மூலம் வாக்காளர்கள் தாங்கள் வாக்களிக்க வேண்டிய வாக்குச்சாவடி மையம் (Polling Station), பாகம் எண் (Part Number), வரிசை எண் (Serial Number) ஆகிய விவரங்களை எளிதில் அறிந்துகொள்ளலாம். வாக்காளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட தகவல் சீட்டில் உள்ள விவரங்களைச் சரிபார்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இது குறித்து மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான விஷூ மகாஜன் தெரிவித்துள்ளதாவது: “வாக்காளர் தகவல் சீட்டு என்பது ஒரு தகவல் ஆவணம் மட்டுமே. வாக்களிக்கும் போது இந்தச் சீட்டுடன், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை (EPIC) அல்லது தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட 12 மாற்று ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை அவசியம் கொண்டு வர வேண்டும். இந்தப் பணிக்குத் தேவையான ஒத்துழைப்பை பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் வழங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.


