தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனைகளுக்கு டிஜிட்டல் பரிவர்த்தனை மட்டுமே ஏற்கப்படுவதால் ஏழை மக்கள் அலைக்கழிக்கப்படுவதாகவும், நேரடியாகவும் பணத்தைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில், மருத்துவமனையில் நோயாளிகளுக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மற்றும் இதர பரிசோதனைகள் மேற்கொள்ளும்போது, ‘ஜிபே’ அல்லது ‘போன்பே’ போன்ற டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் மட்டுமே பணம் செலுத்த வேண்டும் எனக்கூறி நோயாளிகள் கட்டாயப்படுத்தப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
குறிப்பாக, கிராமப்புறங்களில் இருந்து வரும் பலரிடம் இதுபோன்ற ஆன்லைன் பணப்பரிவர்த்தனை வசதிகள் இல்லாத நிலை உள்ளது. அவர்களிடம் நேரடியாகப் ரொக்கப் பணம் இருந்தாலும், டிஜிட்டல் முறையில் மட்டுமே செலுத்த வேண்டும் எனக் கூறுவதால் நோயாளிகளும் அவர்களது உறவினர்களும் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
எனவே, அரசு மருத்துவமனைக்கு வரும் ஏழை, எளிய மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, டிஜிட்டல் வசதி இல்லாதவர்களிடம் நேரடியாகப் பணத்தைப் பெற்றுக்கொண்டு பரிசோதனைகளை மேற்கொள்ளும் வசதியை உடனடியாக ஏற்படுத்த வேண்டும்.
இப்பிரச்சினையில் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமும், மருத்துவமனை நிர்வாகமும் உடனடியாகத் தலையிட்டுப் பொதுமக்களின் சிரமத்தைப் போக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாநகரக்குழு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


