மத்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சரகம், தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை மற்றும் தூத்துக்குடி மாவட்டத் திறன் பயிற்சி அலுவலகம் இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான பிரதம மந்திரியின் தேசிய தொழிற்பழகுநர் (அப்ரண்டிஸ்) சேர்க்கை முகாம் வரும் செப்டம்பர் 23, 2026 (புதன்கிழமை) அன்று நடைபெறுகிறது.

இச்சேர்க்கை முகாம் தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் (ITI) காலை 09.00 மணி முதல் நடைபெறவுள்ளது. மத்திய, மாநில பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் முன்னணித் தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் இம்முகாம் மூலம் 200-க்கும் மேற்பட்ட தொழிற்பழகுநர் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

கல்வித் தகுதி மற்றும் பங்கேற்போர்:

8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது தோல்வியடைந்தவர்கள்.

அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) தேர்ச்சி பெற்று இதுவரை தொழிற்பழகுநர் பயிற்சி பெறாத இளைஞர்கள்.

பட்டயம் (Diploma) மற்றும் பட்டப்படிப்பு (Degree) முடித்த ஆண், பெண் இருபாலரும் தகுந்த அசல் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களுடன் பங்கேற்கலாம்.

உதவித்தொகை மற்றும் சலுகைகள்:

பயிற்சிக் காலத்தில் மாதம் ரூ.10,560/- முதல் ரூ.11,040/- வரை நிறுவனங்களால் உதவித்தொகை வழங்கப்படும்.

1961-ஆம் ஆண்டின் தொழிற்பழகுநர் சட்டத்தின்படி ஓராண்டுப் பயிற்சியை முடிப்பவர்களுக்கு மத்திய அரசின் தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் (NAC) வழங்கப்படும்.

இச்சான்றிதழ் பெற்றவர்களுக்கு அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கப்படும்.

அரசாணை நிலை எண் 6 (நாள்: 25.01.2025)-ன்படி, ஐடிஐ முடித்து இப் பயிற்சியை மேற்கொள்வோரின் ஓராண்டு காலம் அரசுப் பணிக்கான முன்அனுபவக் காலமாக (Work Experience) எடுத்துக்கொள்ளப்படும். வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கும் இது பெருமளவில் உதவும்.

தொடர்பு கொள்ள வேண்டிய விவரங்கள்: இம்முகாம் குறித்த கூடுதல் விவரங்களுக்குக் கோரம்பள்ளம் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் உள்ள மாவட்டத் திறன் பயிற்சி அலுவலகத்தை நேரிலோ அல்லது 9499055809 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.