திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு 33¾ பவுன் தங்கச் சங்கிலியை, தொழில் அதிபர் காணிக்கையாக வழங்கினார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குச் சென்னை சூப்பர் சரவணா ஸ்டோர் உரிமையாளரும், தொழில் அதிபருமான ராஜரத்தினம் தனது குடும்பத்தினருடன் நேற்று சாமி தரிசனம் செய்தார். அப்போது அவர் மூலவரான முருகப்பெருமான் கழுத்தில் அணிவதற்காக 33¾ பவுன் தங்கச் சங்கிலியைக் காணிக்கையாக வழங்கினார்.
அந்த தங்கச் சங்கிலியுடன் கூடிய டாலரில், ஒருபுறம் வேலும், மயிலும், மறுபுறம் ஓம் சரவணபவ எனப் பொறிக்கப்பட்டு இருந்தது. சுமார் ரூ.12 லட்சம் மதிப்பிலான அந்த தங்கச் சங்கிலியைக் கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் உள்துறை கண்காணிப்பாளர் ராமசுப்பிரமணியன் பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


