தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பெயரில் போலி முகநூல் கணக்கைத் தொடங்கி, மர்ம நபர்கள் பண மோசடியில் ஈடுபட்டு வரும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் பெயர் மற்றும் புகைப்படத்தைப் பயன்படுத்தி மர்ம நபர்கள் சிலர் போலி முகநூல் (Facebook) பக்கத்தை உருவாக்கியுள்ளனர். இந்தத் திரிக்கப்பட்ட பக்கத்தின் மூலம் பொதுமக்களிடம் பண உதவி கேட்டும், பல்வேறு மோசடி வேலைகளில் ஈடுபட்டும் வருவது போலீசாரின் கண்காணிப்பில் தெரியவந்தது.
காவல்துறை உயர் அதிகாரியின் பெயரிலேயே மோசடி நடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு போலீசார், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். அந்தப் போலிப் பக்கத்தை உருவாக்கியது யார்? பின்னணியில் இருக்கும் கும்பல் எது? என்பது குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்துக் காவல்துறை தரப்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை வருமாறு: காவல்துறை அதிகாரிகள் யாரும் முகநூல் அல்லது சமூக வலைதளங்கள் வாயிலாகப் பொதுமக்களிடம் பணம் கேட்கமாட்டார்கள். அதிகாரிகளின் பெயரில் வரும் பணக் கோரிக்கைகளையோ அல்லது மிரட்டல்களையோ பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம்.
தெரியாத நபர்களுக்கோ அல்லது சந்தேகத்திற்குரிய கணக்குகளுக்கோ பணத்தை அனுப்பி ஏமாற வேண்டாம். சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு மாவட்ட காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


